குஜராத் குல்பர்க் சொசைட்டி வன்முறை: மோடிக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை- விசாரணை குழு

இத் தகவலை அகமதாபாத் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று தெரிவித்தது. இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இஷான் ஜாப்ரியின் மனைவி ஜகியா ஜாப்ரியிடம் 30 நாட்களுக்குள் வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தில் ஏற்பட்ட வன்முறையில் குல்பர்கா சொசைட்டியில் 69 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக ஜகியா ஜாப்ரி தொடர்ந்த வழக்கில், வன்முறையை கட்டுப்படுத்தத் தவறிய மாநில முதலமைச்சர் நரேந்திர மோடியையும் மேலும் 57 பேரையும் குற்றவாளியாக சேர்த்திருந்தார்.
ஆனால், இது குறித்து விசாரணை நடத்திய ஆ.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு, இதில் மோடிக்கும் 57 பேருக்கும் எதிராக ஆதாரம் இல்லை என்று கூறி, இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக அகமதாபாத் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.பட் இன்று அறிவித்தார்.
மேலும் சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை அறிக்கை, சாட்சிகளின் வாக்குமூலம் மற்றும் அனைத்து ஆவணங்களையும் 30 நாட்களுக்குள் ஜாகியா ஜாப்ரியிடம் வழங்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
மோடியின் பெயரைக் கெடுக்க முயல வேண்டாம்-பாஜக:
இந் நிலையில் சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கையை வரவேற்றுள்ள பாஜக, கலவரத்தை காரணமாக வைத்து முதல்வர் நரேந்திர மோடியின் பெயரைக் கெடுக்க முடியாது என்று கூறியுள்ளது.
இக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், நடந்த கலவரங்கள் துரதிஷ்டவசமானவை. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், கலவரங்களைக் காரணமாக வைத்து நரேந்திர மோடியின் பெயரைக் கெடுக்க முயலக் கூடாது என்றார்.












Click it and Unblock the Notifications