குட்டி ராதிகாவுடன் 2-வது திருமணம்: குமாரசாமியின் எம்பி பதவி தப்பியது!

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது எம்.பி.யாகவும் இருக்கிறார்.
பிரபல தமிழ், கன்னட நடிகை குட்டி ராதிகாவை சில ஆண்டுகளுக்கு முன் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் இவர். இதைத் தொடர்ந்து யார் கண்ணிலும் படமாமலிருந்து குட்டி ராதிகா, கடந்த ஆண்டு, குழந்தையோடு பெங்களூர் விமான நிலையத்தில் வந்திறங்கினார். குழந்தையின் தந்தை குமரசாமிதான் என பகிரங்கமாக அறிவித்தார். இதனை குமாரசாமியும் ஒப்புக் கொண்டார்.
முதல் மனைவி இருக்கும்போதே குட்டி ராதிகாவுடன் திருமணம்
இந்த நிலையில், குமாரசாமி மீது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பெங்களூரை சேர்ந்த வக்கீல் சசிதார் பெலகும்பா வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த மனுவில், "ஜனதா தளம் (எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி, நடிகை குட்டி ராதிகாவை 2-வதாக திருமணம் செய்து உள்ளார். அவரது முதல் மனைவி அனிதா உயிருடன் இருக்கும்போதே ராதிகாவை 2-வதாக மணம் முடித்துள்ளார்.
ராதிகா ஊடகத்தில் தெரிவித்ததன் மூலம் அவருக்கும், குமாரசாமிக்கும் இடையேயான திருமணம் உறுதியாகி உள்ளது. மேலும் குமாரசாமிக்கு ராதிகா மூலம் குழந்தை ஒன்றும் உள்ளது. குமாரசாமி இந்து மதத்தை சேர்ந்தவர். அவர் 2-வது திருமணம் செய்தது சட்ட விரோதமானது ஆகும்.
எம்.பி. பதவி தகுதியிழப்பு செய்ய வேண்டும்
எனவே குமாரசாமியின் எம்.பி. பதவியை தகுதியிழப்பு செய்ய பாராளுமன்ற சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும். ஒவ்வொரு இந்திய குடிமகனும் சமமாக நடத்தப்பட வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின் 14-வது பிரிவு சட்டம் ஒவ்வொருவருக்கும் சமமாக பொருந்தும் என்று தெளிவாக கூறுகிறது. எனவே குமாரசாமியின் பதவியை தகுதியிழப்பு செய்ய பாராளுமன்ற சபாநாயகருக்கு தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்,'' என்று கூறியிருந்தார்.
இந்த மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், குமாரசாமியின் எம்.பி. பதவியை தகுதியிழப்பு செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications