பெங்களூர்: தந்தையால் சித்ரவதைக்காளான 3 மாத குழந்தை அப்ரீன் மாரடைப்பால் மரணம்

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள வாணி விலாஸ் அரசு மருத்துவமனையில் கழுத்து எலும்பு முறிவு, நெற்றி மற்றும் உடலில் சிகரெட் சூடு, உடல் முழுவதும் காயத்துடன் 3 மாத குழந்தை அப்ரீன் கடந்த வியாழக்கிழமை சேர்க்கப்பட்டது. அதன் தலையில் பலத்த காயங்கள் இருந்தன. கிட்டத்தட்ட கோமாவில் இருந்த அதற்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன் மூளையில் வீக்கம் மற்றும் ரத்தக் கசிவு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் அந்த குழந்தையின் நிலைமை இன்று காலை மோசமானது. இதையடுத்து அது சற்று நேரத்திற்கு முன் மாரடைப்பால் மரணம் அடைந்தது.
அப்ரீனின் தந்தை உமர் பாருக், தாய் ரேஷ்மா பானு. உமர் தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று நினைத்திருந்தபோது அப்ரீன் பிறந்ததால் ஆத்திரம் அடைந்தார். இதையடுத்து அவர் பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் அதை சிகரெட் துண்டால் சுடுவது, அடிப்பது என்று கொடுமைப்படுத்தி வந்துள்ளார். குழந்தையின் கழுத்தை நெறித்து கொல்லவும் முயன்றுள்ளார்.
இனியும் விட்டுவைத்தால் குழந்தையை கொன்றுவிடுவார் என்று நினைத்து ரேஷ்மா அதை பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார். முன்னதாக குழந்தைக்கு சிகிச்சை அளிக்க உமரின் பெற்றோர் மறுத்துள்ளனர். அவர்களின் எதிர்ப்பை மீறி தான் ரேஷ்மா மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ரேஷ்மா உமரின் இரண்டாவது மனைவி ஆவார்.












Click it and Unblock the Notifications