மீனவர்களை சுட பயன்படுத்திய துப்பாக்கிகள் அடையாளம் தெரிந்தது
திருவனந்தபுரம்: இத்தாலி கப்பலில் இருந்து தமிழக மீனவர்களை சுட பயன்படுத்திய துப்பாக்கிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கேரளாவில் கொல்லம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இத்தாலி சரக்கு கப்பலில் இருந்து கடற்படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் கன்னியாகுமரியை சேர்ந்த அஜீஸ் பி்ங்கோ, மற்றும் கொல்லத்தை சேர்ந்த ஜெலஸ்டின் ஆகியோர் பலியாகினர். இது தொடர்பாக இத்தாலி கடற்படை வீரர்களான மாசிமிலியானோ, ஜிரோன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கொச்சி போலீஸ் கமிஷனர் அஜித்குமாரின் தலைமையில் போலீசார் கப்பலில் சோதனை நடத்தி 15 துப்பாக்கிகள், ஆயிரக்கணக்கான தோட்டாக்கள், ஆயுதங்களைக் கைப்பற்றினர். இதில் மீனவர்களை சுட பயன்படுத்திய துப்பாக்கியை கண்டுபிடிப்பதற்காக கைப்பற்றப்பட்ட அனைத்து துப்பாக்கிகளும் திருவனந்தபுரத்தில் உள்ள பரிசோதனை கூடத்தில் ஓப்படைக்கப்பட்டது. அதில் மீனவர்களை சுட பயன்படுத்திய 2 துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
பெரட்டா ஏஆர்எஸ்க் 160 ரக துப்பாக்கிகளை பயன்படுத்தித்தான் இத்தாலி கடற்படை வீரர்கள் மீனவர்களை சுட்டுள்ளனர். இது தொடர்பான அறிக்கையை கொச்சி போலீசார் கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
மீனவர்களை சுட பயன்படுத்திய துப்பாக்கிகள் இரண்டும் முக்கிய ஆதாரங்கள் என்பதால் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட இத்தாலி சரக்கு கப்பலை நிபந்தனைகளுடன் விடுவிக்க உயர்நீதிமன்றம் 2 வாரங்களுக்கு முன் உத்தரவிட்டது.
கொல்லம் மீனவர்களின் உறவினர்கள் இதை எதிர்த்து மேல் முறையீடு செய்தனர். இதை விசாரித்த உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் கப்பலை விடுவிக்கும் உத்தரவை ரத்து செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கப்பல் நிறுவனம் மேல்முறையிடு செய்துள்ளது.
இதை நேற்று விசாரித்த நீதிபதி லோதி தலைமையிலான டிவிசன் பெஞ்ச் வரும் 20ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி மத்திய, கேரள அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications