திமுக ஆட்சியில் ரூ.124 கோடி வீட்டுவசதி வாரிய சொத்து கொள்ளை-துரைமுருகன் மீது விரைவில் நடவடிக்கை
சென்னை: சோழிங்கநல்லூரில் ரூ.811.78 கோடி செலவில் 3,662 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என்றும், திமுக ஆட்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட வீட்டுவசதி வாரிய சொத்துக்கள் மீட்கப்படும் என்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் அறிவித்துள்ளார்.
சட்டசபையில் வீட்டுவசதித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பதிலளித்து பேசிய வீட்டுவசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம் கூறுகையில்,
திமுக ஆட்சியில் வீட்டுவசதி வாரியத்தின் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்படுவதும் அதை அதிமுக ஆட்சியில் மீட்பதும் வழக்கமாகிவிட்டது. திருவான்மியூரில் ரூ. 111 கோடி மதிப்புள்ள 6 ஏக்கர் நிலத்தை திமுக இலக்கிய அணி நிர்வாகி ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். அதை மீட்க நீதிமன்றம் சென்று நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
அண்ணா அறிவாலய ஊழியர்கள் பத்மநாபன், ஜெயக்குமார் ஆகியோருக்கு 3,480 சதுர அடி மனையில் 666 சதுர அடி வீடு 12.2.10 அன்று விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன் சந்தை மதிப்போ ரூ. 5 கோடி. ஆனால் அவர்களுக்கு வெறும் ரூ.1.40 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வரின் பாதுகாவலர்கள் கணேசன், விநோதன், பாண்டியன், பாண்டியனின் மனைவி மீனா ஆகிய 4 பேருக்கு தலா 4,000 சதுர அடிக்கு மேல் உள்ள வீட்டு மனைகள் விற்கப்பட்டுள்ளது. அதற்கான பணத்தை அவர்கள் ஒரே நாளில் கட்டிவிட்டு 18 நாட்களில் அவற்றை விற்றுவிட்டார்கள். தற்போது அங்கு அபார்ட்மென்ட் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு வாரிய சொத்துக்கள் பல கொள்ளை போயுள்ளது. அதையெல்லாம் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
திமுகவினரால் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் நலிவடைந்துள்ளது. முன்னாள் அமைச்சர் பொன்முடி அவரது மனைவி பெயரில் கடந்த 2000ம் ஆண்டு போலியான முகவரி கொடுத்து கூட்டுறவு வீடுகட்டும் சங்கம் மூலம் திருச்சியில் நிலம் வாங்கியுள்ளார்.
இதே போன்று முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் முதலில் நிலம் வாங்கிவிட்டு பின்னர் அதை திருப்பி கொடுத்துவிட்டார். ஆனால் அவரது தம்பி, மனைவி பெயரில் உள்ள நிலங்களை திருப்பிக் கொடுக்க மறுக்கிறார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
குடிசையிலும் கொள்ளை, கோட்டையிலும் கொள்ளை:
கோவை மாவட்டத்தில் உள்ள அம்மன்குளம், உக்கடத்தில் திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்துவிட்டன. அந்த வகையில் அரசுக்கு ரூ.50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. உங்க ஆட்சியில் குடிசையிலும் கொள்ளை, கோட்டையிலும் கொள்ளை நடந்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications