சுனாமியில் 'ஸ்விம்மிங்' போட ஆர்வமாக இருந்த சென்னை மக்கள்!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி அலைகள் தாக்கலாம் என்ற எச்சரிக்கை வெளியானது. பின்னர் இது வராது என்று தகவல்கள் வெளியாகின.மறுபடியும் வரும் என்று செய்திகள் வந்தன. தற்போது இறுதியாக இந்த எச்சரிக்கையை இந்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது.
சுனாமி வரும் என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து சென்னையில் மெரீனா கடற்கரை, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டனர். கடற்கரைக்கு வந்திருந்தோரும், வியாபாரிகளும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
மேலும் கடற்கரைக்கு யாரும் வர வேண்டாம் என்று போலீஸாரும் எச்சரிக்கை விடுத்தனர். இருப்பினும் கடற்கரைக்கு பொதுமக்கள் யாரும் வரவில்லை. ஆனால் கடற்கரையை நோக்கி பலரும் படையெடுத்தனர். சுனாமியைப் பார்க்கப் போகிறோம் என்று ஆர்வமாக கூறியபடி அவர்கள் படையெடுத்தனர். அனைவரும் காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் குவிந்தனர். இவர்களைக் கலைக்க முடியாமல் போலீஸார் திணறினர்.
2004ல் சுனாமி தமிழகத்தைத் தாக்கியபோது மக்களிடையே பெரும் அதிர்ச்சியும், சோக்முமே நிலவியது. காரணம் அப்போது பலருக்கும் சுனாமி என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால் தற்போது சுனாமி குறித்த விழிப்புணர்வு அதிகமாக இருப்பதால் அச்சத்தை விட சுனாமி எப்படி இருக்கும் என்பதை நேரில் பார்க்கும் ஆர்வம் மக்களிடையே அதிகம் இருந்தது வியப்பாக இருந்தது.
ஏதோ சித்திரைத் திருவிழாவுக்குப் போவதைப் போல, அழகர் ஆற்றில் இறங்குவதைப் பார்க்கப் போவதைப் போல, கும்ப மேளாவுக்குப் போவதைப் போல, வேளாங்கண்ணி திருவிழாவுக்குப் போவதைப் போல மக்கள் திரண்டு வந்து கடற்கரைக்குப் போனது பெரும் வியப்பாக இருந்தது.
சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதாக தகவல் வெளியானதும் கடற்கரைப் பகுதியில் குவிந்திருந்தவர்களிடம் நி்ம்மதியை ஏமாற்றமே மேலோங்கியிருந்தது. அடடா, வராமல் போய் விட்டதே என்று ஏமாற்றமடைந்தனர்.
சுனாமி வராது என்ற தகவல் பரவியதும் வழக்கம் போல கடற்கரைக்கு மக்கள் கூட்டம் குவியத் தொடங்கி விட்டது. இருப்பினும் கடலுக்கு அருகே யாரையும் அனுமதிக்காமல் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications