வேளச்சேரி என்கவுண்டர்-அறிக்கை ரெடி- மனித உரிமை ஆணையத்துக்கு அனுப்பி வைப்பு
சென்னை: சென்னை வேளச்சேரியில் நடந்த போலீஸ் என்கவுண்ட்டரில் 5 வட மாநில இளைஞர்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரித்து வந்த சிபிசிஐடி அதிகாரிகள் தங்களது அறிக்கையை போலீஸ் டிஜிபி ராமானுஜத்திடம் தாக்கல் செய்துள்ளனர். அந்த அறிக்கையை தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு டிஜிபி அனுப்பியுள்ளார்.
சென்னை புறநகர்களான பெருங்குடி பாங்க் ஆப் பரோடா மற்றும் கீழ்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில் 2 மாதங்களுக்கு முன்பு சில நபர்கள் துப்பாக்கி முனையில் பணத்தை துணிகரமாக கொள்ளையடித்துச் சென்றனர்.
அடுத்தடுத்து நடந்த இந்த இரு பெரும் வங்கிக் கொள்ளை சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து 20க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. கொள்ளையில் ஈடுபட்டது வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைப் போலீஸார் கண்டுபிடித்தனர்.
இந்த நிலையில் சென்னை வேளச்சேரியில் உள்ள தமிழக வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளையர்கள் தங்கியிருப்பது குறித்துப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து பிப்ரவரி 23ம் தேதி போலீஸார் அங்கு விரைந்தனர். அப்போது நடந்த மோதலில் போலீஸார் சரமாரியாக சுட்டதில் கொள்ளயைர்கள் ஐந்து பேரும் கொல்லப்பட்டனர்.மேலும் அந்த வீட்டிலிருந்து ஒரு வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட பணமும் மீட்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்த சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி தங்களது அறிக்கையை தற்போது டிஜிபியிடம் தாக்கல் செய்துள்ளன். இதுகுறித்து தேசிய மனித உரிமை ஆணையம் அறிக்கை கேட்டிருப்பதால் அறிக்கையை அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார் டிஜிபி ராமானுஜம்.












Click it and Unblock the Notifications