குற்றாலத்தில் கனமழை: மழை சித்தர் பிரார்த்தனை காரணமா?
குற்றாலம்: தண்ணீரின்றி வறண்டு போன குற்றாலத்தில் மழை சித்தர் பிரார்த்தனை செய்ததால் தான் தற்போது அங்கு பலத்த மழை பெய்து வருவதாக அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.
தென்காசி, குற்றாலம், செங்கோட்டை பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் அடித்து வருவதால் நீர் நிலைகள் வற்றி, வறண்ட பூமியாக காட்சியளிக்கிறது. குற்றாலம் ஐந்தருவி போன்ற அருவிகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டது. இதனால் குற்றாலத்திற்கு குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் குளிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கடந்த ஆண்டு முழுவதும் குற்றாலத்தில் தண்ணீர் கொட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்துரைச் சேர்ந்த மழை சித்தர் பாலகிருஷ்ணன் என்பவர் குற்றாலத்தில் மழை வேண்டி கடந்த 25-3-2012 அன்று பிரர்த்தனை செய்தார். இவர் வருண பகவானை வேண்டி அருவிக்கரையி்ல் கைகளை உயர்த்தியவாறு மழை வேண்டி வழிபட்டார். 2, 3 நாட்களில் மழை பெய்வதோடு அருவிகளில் கண்டிப்பாக தண்ணீர் வரும் என உறுதியளித்தார். இவரின் பிரர்த்தனை சுற்றுலாப் பயணிகளை வியப்படைய வைத்தது.
இந்நிலையில் அவரது வாக்கு உண்மை தான் என்பதற்கு சான்றாக தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களில் இடை இடையே இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் மழை வேண்டி பிரர்த்தனை செய்த மழை சித்தர் என்ற பாலகிருஷ்ணன் செங்கோட்டை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டும் மழையில் பிரர்த்தனை செய்தார். இம்மழை இப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications