சொத்துகுவிப்பு வழக்கு: விசாரணைக்கு தன்னுடன் வர இளவரசி மருமகனுக்கு சசிகலா தடை

முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தற்போது சசிகலாவிடம் வாக்குமூலம் வாங்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மெடோ, சசி என்டர்பிரைசஸ், ரிவர்வே அக்ரோபார்ம், ராமராஜ் அக்ரோபார்ம், நெக்ஸ் பிராபர்டீஸ் ஆகிய நிறுவனங்களின் இயக்குனர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மெடோ, சசி என்டர்பிரைசஸ், ரிவர்வே அக்ரோபார்ம், ராமராஜ் அக்ரோபார்ம், நெக்ஸ் பிராபர்டீஸ் ஆகிய நிறுவனங்களில் பங்குதாரர்களாக மட்டுமே உள்ளனர். அவர்களுக்கும், நிறுவனங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
எங்கள் நிறுவனங்களின் கணக்கு வழக்குகள் முறையாக உள்ளன. முறையாக வரி செலுத்தி வருகிறோம். தேவையில்லாமல் எங்கள் நிறுவனங்களை சொத்து குவிப்பு வழக்கில் சேர்த்துள்ளனர். எனவே, எங்கள் நிறுவனங்களை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அதை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.
இதையடுத்து அந்நிறுவனங்களின் இயக்குனர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் தியாகராஜன், நாக சுப்பிரமணியம் ஆகியோர் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி சென்னை உயர் நிதீமன்ற உத்தரவை தாக்கல் செய்தனர். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி மல்லிகார்ஜுனையா அந்த வழக்கு விசாரணையை வரும் மே மாதம் 2ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
அதன் பிறகு சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கர் ஆஜராகி வாதாடுகையில் கூறியதாவது,
இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சொத்துக்களின் ஆவணங்களை அளிக்குமாறு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். அந்த மனு மீதான விசாரணை வரும் 16ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கு விசாரணையை வரும் 18ம் தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்றார்.
அதற்கு அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கூறுகையில், கூடுதல் ஆவணங்கள் கேட்டு அவர்கள் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை. வேறு மனு தாக்கல் செய்யுமாறு கூறியுள்ளார். இங்கு நடக்கும் வழக்கு விசாரணைக்கு அவர் தடை விதிக்கவில்லை. அதனால் வழக்கு விசாரணை நடக்க வேண்டும் என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 18ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
நேற்றைய விசாரணையின்போது சசிகலாவும், இளவரசியும் ஆஜராகினர். ஆனால் சுதாகரன் ஆஜராகவில்லை. சசிகலா தான் வழக்கமாக வரும் காரில் வராமல் டிஎன் 07 ஏஜெ 9999 என்ற எண் கொண்ட காரில் வந்தார். அந்த கார் போயஸ் கார்டனில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களுடன் வழக்கமாக வரும் இளவரசியின் மருமகன் ராஜராஜன் நேற்று வரவில்லை. அவரை வர வேண்டாம் என்று சசிகலா கூறியதாகத் தெரிகிறது.
மேலும் நேற்று உற்சாகமாகக் காணப்பட்ட சசிகலாவின் கையில் வழக்கமாக இருக்கும் சிவப்புக் கயிற்றை காணவில்லை.












Click it and Unblock the Notifications