குச்சியால் அடித்ததில் மாணவிக்கு கண் பார்வை பறிபோனது...ஆசிரியை கைது!
நாந்குநேரி: நெல்லை மாவட்டம் பரப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் எல்கேஜி மாணவியை ஆசிரியை குச்சியால் அடித்ததில் சிறுமியின் கண்பார்வை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் பரப்பாடி அருகேயுள்ள பொத்தையடி ஆலங்குளத்தை சேர்ந்தவர் தர்மராஜ் மகன் கண்ணபிரான் (42). இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில் 2வது குழந்தை பிரியதர்ஷினி (4).
பரப்பாடியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் 1ம் தேதியன்று மாணவி பிரியதர்ஷினி சரியாக படிக்காததால் ஆங்கில ஆசிரியை பிரீத்தா ஆரோக்கிய மேரி (24) குச்சியால் மாணவியை அடித்துள்ளார்.
இதில் பிரியதர்ஷினிக்கு வலது கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக நெல்லையில் உள்ள தனியார் கண் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் கண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கண்ணிற்கு செல்லும் நரம்பு கட் ஆனதால் மாணவியின் வலது கண் பார்வை பறிபோனது.
இதுகுறித்து மாணவியின் தந்தை கண்ணபிரான் விஜயநாராயணம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளத்துரை வழக்குப்பதிவு செய்து ஆசிரியை பிரீத்தாவை கைது செய்து நான்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.
நாங்குநேரி மாஜிஸ்திரேட் ஆசிரியை பிரீத்தாவை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இவ்வழக்கு தொடர்பாக பள்ளி நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications