களை கட்டியது தமிழ் புத்தாண்டு: பொன்னேறு பூட்டிய விவசாயிகள்!

நந்தன தமிழ்புத்தாண்டு நலமாய் இருக்க சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை மாவிலைத் தோரணங்களினால் அலங்கரித்திருந்தனர். அதிகாலையிலையே குளித்து புத்தாடை அணிந்து கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.
வடபழனி முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்களில் அதிகாலையில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.
பொன்னேறு திருவிழா
சித்திரை முதல்நாள் கிராமங்களில் பொன்னேறு பூட்டும் திருவிழா நடைபெறுவது வழக்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள சுரக்காப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களின் வீடுகளில் இருந்த காளைகளை அலங்கரித்து கலப்பையினை நன்றாக கழுவி, சந்தனம் குங்குமம் இட்டு அலங்கரித்தனர்.
பின்னர் காளைகளில் பூட்டி இந்த ஆண்டு விவசாயம் நன்றாக செழிக்க வேண்டும் என்று இறைவனை வேண்டி தங்களின் நிலத்தில் மூன்று முறை உழுதனர். இதனையடுத்து காளைகளுக்கும், கலப்பைக்கும் கற்பூர தீபம் காட்டப்பட்டது.
இதனையடுத்து இறைவனுக்கு படைக்கப்பட்டிருந்த கப்பியரிசியை அனைவருக்கும் பிரசாதமாக அளித்தனர். கப்பியரிசி என்பது முனை தீட்டாத பச்சரிசியை ஊறவைத்து வெல்லம், பொட்டுக்கடலை, சேர்த்து கலக்கப்பட்டதாகும்.
இதனையடுத்து ஏரிலிருந்து காளைகளை அவிழ்த்து... கலப்பை, மாடுகளையும்,படையல் பொருட்களையும் வீட்டிற்கு கொண்டுவந்து பத்திரப்படுத்தினர். வருடத்தின் முதல்நாள் இவ்வாறு செய்வதன் மூலம் இந்த ஆண்டு விவசாயம் செழிக்கும் என்பது தமிழக விவசாயிகளின் பாரம்பரியம் மிக்க நம்பிக்கையாகும்.












Click it and Unblock the Notifications