அம்பேத்கர் பிறந்தநாள் விழா: அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழா ரத்து
சேலம்: சேலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழா திடீர் என ரத்து செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் அரசு கலைக் கல்லூரி, மகளிர் கலைக் கல்லூரி, ஆத்தூர் அரசினர் கலைக் கல்லூரி மற்றும் அரசு உதவிபெறும் கலைக் கல்லூரி உள்ளது.
இந்த கல்லூரிகளில் படிக்கும் இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கும் விழா நாளை (14ம் தேதி) சேலம் அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் மகரபூசனம் தலைமையில், சேலம் மேயர் சவுண்டப்பன், காவல்துறை ஆணையாளர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் நடக்கும் என்றும், அதில் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் ஒரு சில தலித் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கல்லூரி மாணவர்களை அழைத்துக் கொண்டு மாவட்ட கலெகட்ர் அலுவலகத்திற்கு சென்று அம்பேத்கார் பிறந்தநாளில் நீங்கள் விழா நடத்தினால் எங்களால் எப்படி அம்பேத்கரின் பிறந்தநாளை கொண்டாட முடியும்? திட்டமிட்டு நீங்கள் இந்த விழாவை நடத்தி “தலித்” மாணவர்களை அம்பேத்கரின் பிறந்த நாளை கொண்டாடவிடாமல் சதி செய்கிறீர்கள் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனையடுத்து கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேட்டாப் வழங்கும் விழாவை மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளனர். இதனால் கல்லூரி மாணவர்களுக்கு வழங்குவதாக இருந்த 700 லேப்டாப்கள் போலீசார் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.