மன்மோகனுடன் அகிலேஷ்யாதவ் சந்திப்பு- மத்திய அரசு நிதி உதவியை தடையின்றி வழங்க கோரிக்கை
டெல்லி: பிரதமர் மன்மோகன்சிங்கை உத்தரப்பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் இன்று டெல்லியில் சந்தித்துப் பேசினார்.
மாநிலத்தின் மூத்த அதிகாரிகளுடன் பிரதமரை சந்தித்த அகிலேஷ், உத்தரப்பிரதேசத்துக்கு வழங்கப்படும் நிதியை சுமூகமான முறையில் தடங்கல் ஏதுமின்றி வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் எதிர்வரும் கும்பமேளாவை முன்னிட்டு கங்கை நதியை தூய்மைப்படுத்துவது, மாநிலத்துக்கான நிலக்கரி விநியோகத்தை அதிகரிப்பது போன்ற கோரிக்கைகளையும் மன்மோகனிடம் அகிலேஷ் யாதவ் முன் வைத்தார்.
இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அகிலேஷ் யாதவ் கூறியதாவது:
பிரதமருடனான சந்திப்பு நல்ல முறையில் இருந்தது. உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு என தனியாக நிதி கோரவில்லை. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், நிலக்கரி பற்றாக்குறை, கங்கை நதி தூய்மைப்படுத்துதல் போன்ற திட்டங்களையே ஆலோசித்தோம்.
அனைத்து மக்கள் நலத் திட்டங்களையும் தடங்கல் இல்லாமல் அமல்படுத்த மத்திய அரசு முழு உதவிசெய்யும் என்று பிரதமர் உறுதியளித்துள்ளார்.
மத்திய அரசின் நிதி கிடைத்ததும் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும். உத்தரப்பிரதேசம் முன்னேறினால் நாடு முன்னேற்றப் பாதையில் செல்வதாக அர்த்தம. தமது அரசானது சட்டம் ஒழுங்குக்கு முன்னுரிமை கொடுத்து செயற்படுகிறது. மாயாவதி அரசில் நிகழ்ந்த ஊழல் முறைகேடுகளைக் களைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எமது அரசின் புதிய திட்டங்களின் பலன்களை 3 மாதங்களில் அனைவரும் தெரிந்து கொள்ளலாம். பிரதமருடனான தற்போதைய சந்திப்பில் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் தொடர்பாக விவாதிக்கவில்லை. ஏப்ரல் 16-ந் தேதி நடைபெறும் முதலமைச்சர்கள் மாநாட்டில் இதுபற்றி எங்களது கருத்துகள் தெரிவிக்கப்படும் என்றார்.
பின்னர் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலையும் அகிலேஷ் யாதவ் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.