மும்பையிலும் பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பால் உயிரிழப்பு தொடங்கியது
மும்பை: மும்பை நகரமும் முதலாவது பன்றிக் காய்ச்சல் இறப்பை எதிர்கொண்டிருக்கிறது. 8 மாத கர்ப்பிணி இந்நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
மும்பையில் கடந்த வாரத்தில் 3 பேருக்கு பன்றிக் காய்ச்சல் நோயின் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதுவரை மொத்தம் 12 பேருக்கு இம்மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் துலே பகுதியைச் சேர்ந்த திருஷாலி லட்சுமண் திவாடே என்ற 8 மாத கர்ப்பிணிக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பன்றிக் காய்ச்சல் நோயின் பாதிப்பு இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதைத் தொடர்ந்து மும்பையின் ஜே.ஜே. மருத்துவமனைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார். அவருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த கர்ப்பிணி உயிரிழந்தார்.
மும்பையில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் 2 பேரை பன்றிக்காய்ச்சல் நோய் தாக்கியது உறுதி செய்யப்பட்டது. கடைசி உயிரிழப்பு 2010-ம் ஆண்டு ஜுலை மாதம் நிகழ்ந்தது. அதற்குப் பிறகு 1 ஆண்டு கழித்து மும்பையில் பன்றிக்காய்ச்சலுக்கு ஒருவர் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.