நெல்லை அருகே மின்னல் தாக்கி கல்லூரி மாணவர் பலி!
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகே மின்னல் தாக்கியதில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூரை சேர்ந்தவர் ஆறுமுகவேல். இவரது மகன் மாடசாமி (20). இவர் நெல்லை பேட்டையில் உள்ள இந்துக் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், பாளையங்கோட்டையை அடுத்துள்ள சீவலப்பேரி சுடலைமாடசாமி கோயிலில் கொடை விழாவில் பங்கேற்க ஆறுமுகவேல் தனது குடும்பத்துடன் சென்றிருந்தார்.
சீவலப்பேரி அருகே பொங்கல் வைக்க ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த போது வானத்தில் இருந்து லேசான மழைத்தூறல் விழுந்தது. அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் கல்லூரி மாணவர் மாடசாமி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
மாணவரின் மரணம் குறித்து சீவலப்பேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரியில் மழை
இதனிடையே கன்னியாகுமரியில் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமையன்று கோடை மழை பெய்தபோது ஐஸ் கட்டிகள் விழுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அம்மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில், பூதப்பாண்டி, புதுக்கடை, நித்திரவிளை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த இடியுடன் மழை பெய்தது. இந்த மழை சுமார் அரை மணி நேரம் நீடித்தது.
முஞ்சிறை, தவிட்டவிளை, வேங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் ஐஸ்கட்டி மழை பெய்தது. கற்கள் போல் ஐஸ் கட்டிகள் ஒவ்வொன்றாக விழுந்தன. ஓடு வீடுகளின் மீது ஐஸ் கட்டிகள் விழுந்து சத்தம் கேட்டதால் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சில வீடுகளில் ஓடுகள் லேசாக உடைந்தது. வெளியே வந்து பார்த்த மக்கள் ஐஸ் கட்டி மழை தான் காரணம் என அறிந்து அமைதியானார்கள்.












Click it and Unblock the Notifications