சென்னை அடகுக்கடைக்காரர் கொலை- 5 பேரிடம் போலீஸ் விசாரணை
சென்னை: மதுரவாயலில் நகைக் கடை அதிபர் கணேஷ்ராம் படுகொலை வழக்கில் பெண் உட்பட 5 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரவாயலில் நகைவாங்குவது போல் வந்த மர்ம நபரால் நேற்றுமுன்தினம் கணேஷ்ராம் கொலை செய்யப்பட்டார். கணேஷ்ராமை கொன்ற கொலையாளி 100 பவுன் நகைகளுடன் தப்பி ஓடினான். பட்டபபகலில் நடந்த இக்கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விசாரணை மேற்கொண்ட போலீசார் நகைக் கடையில் வைக்கப்பட்டிருந்த காமிரா மூலம் பதிவாகி இருந்த கொலையாளியின் புகைப்படத்தையும் வெளியிட்டனர்.
இந்நிலையில் கொலையாளி திருநெல்வேலியைச் சேர்ந்தவனாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் நெல்லையில் தனிப்படை போலீசார் முகாமிட்டுள்ளனர்.
மேலும் நகைக்காக மட்டும் கொலை நடைபெறவில்லை என்று உறுதி செய்துள்ளதாக காவல்துறை இணை ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார்.
இக்கொலையில் ஒரு பெண்ணுக்கும் தொடர்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. சந்தேகத்துக்குரிய அந்த பெண் உட்பட 5 பேரிடம் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணேஷ்ராம் படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று 2-வது நாளாக மதுரவாயலில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் அடகுக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.