குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து ஜெயலலிதா, மோடி, நவீன் பட்நாயக் ஆலோசனை?

டெல்லியில் நேற்று உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான முதல்வர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் ஜெயலலிதாவும், மோடி, நவீன் பட்நாயக் ஆகியோர் தமிழ்நாடு இல்லத்தில் தனியாக ஒரு சந்திப்பை மேற்கொண்டனர். இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கால் மணி நேரம் நடந்த இந்த சந்திப்பு தொடர்பாக ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளும், யூகங்களும் ஓடிக் கொண்டுள்ளன. அவர்கள் என்ன பேசினார்கள் என்பது எக்ஸாக்ட் ஆக தெரியவில்லை. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை விவரத்தை மூன்று தலைவர்களுமே தெரிவிக்கவில்லை. இதனால் ஏகப்பட்ட யூகங்கள் ரெக்கை கட்டிப் பறக்கின்றன.
குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக இவர்கள் பேசியிருக்கலாம் என்று ஒரு தகவல் கூறுகிறது. குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு தன்னிஷ்டப்படி யாரையும் நிறுத்தி வெற்றி பெற வைக்கும் திராணி காங்கிரஸுக்கு இல்லை. இதனால் சங்கரன்கோவில் தொகுதியில் சவால் விட்டு தனது திராணியை நிரூபித்த ஜெயலலிதாவுடன், மோடி, பட்நாயக் முக்கிய ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் தற்போது சின்னக் கட்சிகளான அதிமுக, நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம், அகாலிதளம், சிவசேனா, சமாஜ்வாடி ஆகிய கட்சிகளுக்குத்தான் செம கிராக்கியாக உள்ளது. காரணம், இவர்களின் ஆதரவு காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு ரொம்ப அவசியம். எனவே அந்த நோக்கத்திற்காகத்தான் மோடி இந்தக் கூட்டத்தைக் கூட்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சியும், அதிமுகவின் ஆதரவைப் பெற பல வழிகளிலும் முயன்று வருகிறது. பாஜகவும் வலை வீசி வருகிறது. சமீபத்தில் சென்னை வந்த அருண் ஜேட்லியும் ஜெயலலிதாவைப் பார்த்து பேசினார். அப்போதும் இதுதொடர்பாகவே அவர் பேசியதாக கருதப்படுகிறது.
தற்போது மோடியும், நவீன் பட்நாயக்கும் சேர்ந்து ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்தியிருப்பதால் காங்கிரஸ் வட்டாரத்தில் சற்றே குழப்பம் ஏற்பட்டுள்ளது. பாஜக பக்கம் ஜெயலலிதா நகர்ந்து வருவதாகவும் காங்கிரஸ் கருத ஆரம்பித்துள்ளது.
அடுத்த மாதம் டெல்லியில் மீண்டும் முதல்வர்கள் மாநாடு நடைபெறுகிறது. தீவிரவாத தடுப்பு மையம் குறித்த மாநாடு இது. இதில் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீண்டும் பங்கேற்கவுள்ளனர். எனவே அப்போது மீண்டும் காங்கிரஸ் அல்லாத முதல்வர்கள் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் உள்ளிட்ட பலரையும் கூட ஆலோசனைக்கு அழைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றைய சந்திப்புக்கு ஜெயலலிதாதான் நடவடிக்கை எடுத்தார் என்றும் ஒரு தகவல் கூறுகிறது. இது காங்கிரஸுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகளை ஓரணியில் இணைக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தான் முக்கியப் பங்காற்றி தேசிய அரசியலில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் திட்டத்தில் ஜெயலலிதா இருப்பதையும் உணர்த்துவதாக தெரிகிறது.
எனவே குடியரசுத் தலைவர் தேர்தலைப் பயன்படுத்தி ஜெயலலிதாவின் இந்த காய் நகர்த்தல் வேலைகள் தேசிய அரங்கில் பல எதிர்பார்ப்புகளையும், யூகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications