கள்ளக்காதல்: கணவனை கொடைக்கானல் மலையில் இருந்து தள்ளிக் கொன்ற பெண்
நெல்லை: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த நெல்லை துப்புரவுத் தொழிலாளி கொடைக்கானல் மலையிலிருந்து உருட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மனைவி, அவரின் கள்ளக்காதலன் உள்பட 4 பேர் போலீசில் சிக்கினர்.
நெல்லை சந்திப்பு ரயில்வே காலனியைச் சேர்ந்தவர் பரமசிவன். அவர் நெல்லை ரயில்வேயில் பணியாற்றி வருகிறார். அவரது மகன் சரவணகுமார். அவர் கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவுத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவருக்கும், கொடைக்கானல் அண்ணா நகரைச் சேர்ந்த சந்தியாவுக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
கடந்த 8ம் தேதி கொடைக்கானலில் இருந்து சரவணகுமார், சந்தியா ஆகியோர் நெல்லைக்கு வந்தனர். 9ம் தேதி சரவணகுமார் நண்பர்களை பார்க்கச் செல்வதாக கூறி சென்றார். ஆனால் இரு நாட்கள் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. இது குறித்து பரமசிவன் நெல்லை சந்திப்பு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுந்தர பாண்டியன், எஸ்ஐ ஜேசுபாதம் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் சந்தியாவின் உறவினரான கொடைக்கானலைச் சேர்ந்த கனீகராஜ்,அவரது நண்பர்கள் மோகன், மணி ஆகிய 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சரவணகுமார் மனைவி சந்தியாவுக்கு திருமணத்திற்கு முன்பே கனீகராஜுடன் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இதனை சரவணகுமார் கண்டித்துள்ளார்.
இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டனர். கொடைகானலில் செய்தால் மாட்டிக் கொள்வோம் என்பதால் நெல்லை வரும்போது கடத்திச் செல்ல திட்டமிட்டனர். அதன்படி கடந்த 9ம் தேதி நெல்லை சந்திப்பு எஸ்டிடி பூத் அருகே நின்று கொண்டிருந்த சரவணகுமாரை மது குடிக்க அழைத்தனர். அதனை நம்பி அவர்களுடன் சென்ற சரவணகுமார் மது அருந்திய மயக்கத்தில் இருந்தார். அவரை ஒரு காரில் கொடைக்கானல் அருகே உள்ள மயிலாடும்பாறைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து குடிக்க வைத்து மலையில் இருந்து 400 அடி பள்ளத்தி்ல் உருட்டி கொலை செய்துவிட்டனர். இந்த தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
நெல்லை சந்திப்பு போலீசார் கொடைக்கானலுக்கு சென்று சந்தியா, கனீகராஜ், மோகன், மணி ஆகியோரை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றனர். அழுகிய நிலையில் கிடந்த சரவணகுமார் உடலை மீட்டனர். தொடர்ந்து 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.