பஞ்சாயத்து தலைவியின் கருவாட்டு குடோனுக்கு தீ: இடிந்தகரையில் பரபரப்பு
நெல்லை: விஜயபாதி பஞ்சாயத்து தலைவிக்கு சொந்தமான கருவாட்டு குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் இடிந்தகரையைச் சேர்ந்தவர் சகாயராஜ். அவரது மனைவி சகாயபெக்ளின் எஜிடினின். விஜயபாதி பஞ்சாயத்து தலைவியாக உள்ளார். கடந்த 14ம் தேதி இரவு சகாயராஜ், அவரது அண்ணன் ஸ்டாலின், மைத்துனர் இன்னாசி ஆகியோரை இடிந்தகரையில் போராடி வரும் அணு உலை எதிர்ப்புக் குழுவைச் சேர்ந்த 20 பேர் கொண்ட கும்பல் தாக்கியது. இதில் காயமடைந்த சகாயராஜ், ஸ்டாலின் ஆகிய இருவரும் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறி்த்து சகாயராஜ், ஸ்டாலின் கூடங்குளம் போலீசில் புகார் செய்தனர்.
அதில் கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி எங்களை உதயகுமார் தலைமையிலான கும்பல் வழிமறித்து தாக்குதல் நடத்தியது. போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன் மற்றும் சிலருக்கு இதில் தொடர்புள்ளது என குறிப்பிட்டிருந்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து உதயகுமார், புஷ்பராயன் உள்ளிட்ட சிலர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் இடிந்தகரையில் காட்டுப் பகுதியில் உள்ள சகாய பெக்ளினுக்கு சொந்தமான கருவாட்டு குடோன் நேற்று திடீரென தீப்பிடித்தது. இந்த குடோனுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தார்களா, அல்லது குடோன் மேலே சென்ற மின் வயரில் ஏற்பட்ட மின்கசிவினால் தீப்பிடித்ததா என்பது தெரியவில்லை. இதுவரை போலீசிலும் எந்த புகாரும் அளிக்கவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications