மாணவர் சேர்க்கை: கல்லூரி இடங்களை விஜயகாந்த் தருவாரா?-அமைச்சர் கேள்வி
சென்னை: தேமுதிக தலைவர் விஜய்காந்த் தனது கல்லூரியில் உள்ள மாணவர் சேர்க்கைக்கான இடங்களை அரசுக்கு வழங்குவாரா?' என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பினார்.
சட்டப் பேரவையில் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் பேசிய தேமுதிக எம்.எல்.ஏ. தினகரன், பஸ் கட்டணம், பால் விலை, மின்சார கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் முன் போராட்டம் நடத்தியவர் எங்கள் கட்சித் தலைவர் விஜயகாந்த் என்றார்.
அப்போது குறுக்கிட்ட உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, மக்கள் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லக்கூடிய மன்றமாக இந்த சட்டப் பேரவை விளங்குகிறது. அத்தகைய மக்கள் மன்றத்துக்கே வராதவர் அரசியல் ஆதாயத்துக்காகத்தான் போராட்டங்களை நடத்துகிறார். மக்களுக்காக அல்ல என்றார்.
இன்னொரு தேமுதிக எம்எல்ஏ க.பாண்டியராஜன் பேசுகையில், உயர் கல்வி பெறுவோர் சராசரி தமிழ்நாட்டில் 18 சதவீதமாக உள்ளது. கல்வி கட்டண கொள்ளை காரணமாக பல கல்லூரிகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்பியிருந்தாலே 28 சதவீதமாகியிருக்கும் என்றார்.
அப்போதும் குறுக்கிட்ட அமைச்சர் கே.பி.முனுசாமி, அவரது கட்சித் தலைவர் (விஜய்காந்த்) நடத்தும் கல்லூரியில் நன்கொடை கட்டணம் இல்லாமல் தான் பீஸ் வசூலிக்கப்படுகிறதா?'' என்றார்.
அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், எஸ்.எஸ்.என். கல்லூரி சேர்க்கையின் 100 சதவீத இடங்களையும் அரசுக்கே வழங்குகிறது. அதுபோல அவரது தலைவரும் தனது கல்லூரி சேர்க்கைக்கான இடங்களை அரசுக்கு வழங்குவாரா?' என்றார்.
தொடர்ந்து நடந்த கேள்வி நேரத்தின்போது வில்லிவாக்கம் ஜே.சி.டி பிரபாகர் (அதிமுக), மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் திண்டுக்கல் பாலபாரதி, பெரம்பூர் செளந்தரராஜன், அரூர் டில்லி பாபு ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் கே.பி.முனுசாமி அளித்த பதில்:
சென்னையில் 260 விளையாட்டு மைதானங்கள் உள்ளன. மாநகராட்சியின் நிதிநிலையை பொறுத்து, உள்விளையாட்டு அரங்கம் கட்டுவது பற்றி பரிசீலிக்கப்படும்.
விளையாட்டு உபகரணங்கள் வாங்க தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்த முடியாது. இவற்றை உறுப்பினர்கள் தங்கள் சொந்த நிதியில் இருந்து வாங்கிக் கொள்ளலாம்.
திண்டுக்கல்லில் விளையாட்டு மைதானத்துக்கு உபகரணங்கள் வேண்டும் என்று உறுப்பினர் பாலபாரதி கோரியிருக்கிறார். அவரிடம் சொந்த நிதி இல்லை என்பதும் தெரியும். அவரால் முடிந்த குறைந்தபட்ச தொகையாவது கொடுக்கலாம் என்றார் முனுசாமி.
அப்போது எழுந்த செளந்தரராஜன், திண்டுக்கல் விளையாட்டு மைதானத்துக்கு என்னால் பூட்டு தான் வாங்கி தர முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications