கடையநல்லூரில் மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி: 50க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
கடையநல்லூர்: கடையநல்லூரில் பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு பெண் ஒருவர் பலியானது மக்களை பீதியடையச் செய்துள்ளது.
கடையநல்லூர் நகராட்சி நெல்லை மாவட்டத்தில் பெரிய நகராட்சியாகும். இங்கு சுமார் 1 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 2009ம் ஆண்டு திடீரென பரவிய மர்ம காய்ச்சலுக்கு 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர். தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மர்ம காய்ச்சலுக்கு சிலர் உயிரிழப்பது வாடிக்கையாகிவிட்டது. இந்த காய்ச்சல் பரவுவதை தடுக்க 2009ம் ஆண்டு மதுரை, புனே, பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தினர் கடையநல்லூருக்கு வந்து பல்வேறு ஆய்வுகளை நடத்தினர்.
அத்துடன் தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் ராட்சத கொசு ஒழிப்பு இயந்திரம் கொண்டு வரப்பட்டு நகர பகுதிகளிலும் கொசுக்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக கடையநல்லூர் பகுதியில் 50க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நெல்லை, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடையநல்லூர் காயிதே மில்லத் தெருவில் வசித்து வரும் அப்துல் மஜீத் என்பவரது மனைவி ரஹிமாள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நெல்லை தனியார் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். தற்போது 50க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் பெண் பலியானது மக்களை பீதியடையச் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications