வழக்கில் முட்டுக்கட்டை போட தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி- சசி நாளை ஆஜராக உத்தரவு!
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துவிட்டார். சசிகலாவிடம் தற்போது வாக்குமூலம் பெறப்படுகிறது. இதுவரை மொத்தம் 504 கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்துள்லார்.
இதனிடையே ஜெயலலிதா மற்றும் சசிகலா தரப்பில் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான கூடுதல் ஆவணங்களைப் பார்வையிட அனுமதி கோரி 2 புதிய மனுக்கள் கடந்த 18-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதானவாதம் முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு அளிப்பதாக நீதிபதி மல்லிகார்ஜூனையா தெரிவித்திருந்தார். நேற்றைய விசாரணையின் போது சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவருமே நீதிமன்றத்துக்கு ஆஜராகவில்லை. அவர்களது வழக்கறிஞர்களே ஆஜராகினர்.
மனு தள்ளுபடி
முதலில் ஜெயலலிதாவும் சசிகலாவும் தாக்கல் செய்த மனுக்களை கடும் சீற்றத்துடன் நீதிபதி மல்லிகார்ஜூனையா தள்ளுபடி செய்தார். அவர் தமது தீர்ப்பில், சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டு 15 ஆண்டுகள் கழித்து பிறகு வழக்கின் இறுதி விசாரணையின்போது ஆவணங்களைக் கேட்பது சரியில்லை. எனவே சரியான காரணங்கள் இல்லாததால் ஜெயலலிதா, சசிகலா தரப்பில் ஆவணங்களின் நகலை பார்வையிட அனுமதி வேண்டும் என்று கேட்டு தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது'' என்றார்.
சசிகலா உட்பட மூவர் மீது சீற்றம்
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகததற்கு நீதிபதி மல்லிகார்ஜூனய்யா கடும் கண்டனம் தெரிவித்து எச்சரிக்கை விடுத்தார். இந்த வழக்கின் விசாரணை நாளை நடைபெற உள்ளது. இதில் குற்றம்சாட்டப்பட்ட மூவரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். இல்லையெனில் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.
இதனால் நாளை நடைபெறும் விசாரணையில் சசிகலா பங்கேற்கக் கூடும் என்று தெரிகிறது. இல்லையெனில் வழக்கம் போல இன்னொரு மனுவைப் போட்டு நீதிபதியை டென்ஷனாக்குவார்கள்!