TET: டெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு.. ஜூலை 4, 5ல் தேர்வு.. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) எழுத உள்ள தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் சிரமம் உள்ளவர்கள் அல்லது தொழில்நுட்ப காரணங்களால் பெற முடியாதவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்துள்ள சிறப்பு முகாம்களை ஜூன் 22 முதல் ஜூன் 30 வரை அணுகி உதவி பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு ஜூலை 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
மேலும், இதுவரை டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களும் கட்டாயமாக தேர்வெழுதி தகுதி பெற வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 1.75 லட்சம் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆசிரியர்களின் வசதிக்காக மூன்று சிறப்பு டெட் தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன் முதல் கட்டமாக, தற்போது பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு ஜூலை 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
எனவே, தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை முன்கூட்டியே பதிவிறக்கம் செய்து, தேர்வு மைய விவரங்கள் மற்றும் வழிமுறைகளை சரிபார்த்து தேர்வுக்கு தயாராக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications