நாடாளுமன்றத்தில் தொடர் அமளி: 8 தெலுங்கானா காங்கிரஸ் எம்.பிக்கள் 4 நாட்களுக்கு சஸ்பெண்ட்
டெல்லி: பிற்பகல் 2 மணிக்கு லோக்சபா கூடியவுடன் தனி தெலுங்கானா மாநிலம் கோரி மீண்டும் அமளியில் ஈடுபட்ட 8 தெலுங்கானா பகுதி காங்கிரஸ் எம்.பி.க்கள் 4 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று துவங்கியது. காலையில் லோக்சபா கூடியவுடன் தனி தெலுங்கானா மாநிலம் கோரி தெலுங்கானா பகுதி காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் மீரா குமார் அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார். அவை மீண்டும் கூடியதும் தெலுங்கானா எம்.பி.க்கள் அவையை நடத்தவிடாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
ராஜ்யசபாவில் சிடி விவகாரம் தொடர்பாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சி்ங்வி விவகாரம் தலைதூக்கியது. தெலுங்கானா எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டால் அவர்களை சில நாட்களுக்கு அல்லது இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யவும் காங்கிரஸ் முடிவு செய்திருந்தது.
இந்நிலையில் பிற்பகல் 2 மணிக்கு அவை கூடியதும் தனி தெலுங்கானா மாநிலம் கோரி தெலுங்கானா எம்.பி.க்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டு அவையை நடத்தவிடாமல் செய்தனர். இதையடுத்து மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெலுங்கானா எம்.பி.க்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார். அதனைத் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட தெலுங்கானாவைச் சேர்ந்த 8 காங்கிரஸ் எம்.பிக்கள் 4 நாட்களுக்கு அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசிய பிறகே எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications