காவல் நிலையத்தில் இனி சாதாரண மக்களும் உட்கார்ந்து பேசலாம்; 10 சேர் இருக்கும்- ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

Panruti Ramachandran
சென்னை: போலீஸ் நிலையத்திற்கு வருபவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை நாற்காலியில் உட்கார வைத்து மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

சட்டசபையில் இன்று காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கையை முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்தார். இதன் மீது நடந்த விவாதம் விவரம்,

பண்ருட்டி ராமச்சந்திரன் (தேமுதிக):
சத்தீஸ்கர் மாநிலத்தில் கலெக்டர் கடத்தல், ஒடிசா மாநிலத்தில் எம்.எல்.ஏ. கடத்தல் போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. வறுமை, ஏற்றத்தாழ்வு போன்ற காரணங்களால்தான் தீவிரவாதிகள், நக்சலைட்டுகள் தோன்றுகிறார்கள். தமிழகத்தில் வறுமை, துன்பம் ஒருபுறமும், வசதி வாய்ப்பு அதிகரிப்பது என்கிற நிலை மற்றொரு புறம் ஏற்பட்டு ஒரு ஏற்றத்தாழ்வான நிலை இருப்பதால்தான் குற்றச் செயல்கள் அதிகரிக்கின்றன.

முதல்வர் ஜெயலலிதா: தீவிரவாதிகள், நக்சலைட்டுகள், வறுமை ஏற்றத்தாழ்வு காரணமாக உருவாகிறார்கள் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் கூறினார். அத்தகைய தீவிரவாதிகளும், நக்சலைட்டுகளும் தமிழ்நாட்டில் இல்லை. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது.

பண்ருட்டி ராமச்சந்திரன்
: காவல் துறையினர் சாதாரண மக்களுக்காக உழைப்பவர்கள். அவர்களுடைய பார்வையில் ஒரு புதிய சமூக கண்ணோட்டம் வேண்டும். சாதாரண மக்கள் காவல் நிலையத்திற்கு செல்வதற்கு அஞ்சும் நிலை வரக் கூடாது. ஏழைகள் காவல் நிலையத்தை கண்டு பயப்படக்கூடாது.

ஜெயலலிதா: காவல் நிலையங்களை கண்டு அஞ்சுகின்ற நிலைமை கடந்த மைனாரிட்டி திமுக ஆட்சியில்தான் இருந்தது. தற்போது அத்தகைய நிலைமை இல்லை. காவல்துறையை மக்கள் நண்பனாகத்தான் கருதுகிறார்கள். போலீஸ் நிலையத்திற்கு வருபவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது மக்கள் காவல் நிலையம் சென்றால் அவர்கள் நன்றாக கவனிக்கப்படுகின்றனர். புகார் அளிப்பதற்காக காவல் நிலையம் செல்லும் பொதுமக்களுக்கு மரியாதை செய்து அவர்களை நாற்காலி போட்டு அமர வைத்து புகார்களை பெற வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவிட்டு இதற்கென ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் 10 இருக்கைகள் போடுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி காவல் நிலையம் வரும் மக்கள் உபசரிக்கப்பட்டு அவர்களிடம் புகார் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு கடந்த 11 மாத கால இந்த ஆட்சியில் காவல் நிலையம் செல்வதற்கு மக்கள் அஞ்சுகின்ற நிலை ஒருபோதும் ஏற்பட்டதில்லை.

பண்ருட்டி ராமச்சந்திரன்: முதலமைச்சரின் நல்ல நோக்கம் வரவேற்கத்தக்கதுதான். ஆனாலும் அதிலுள்ள சில குறைபாடுகளை எதிர்க்கட்சி என்ற முறையில் நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம்.
உதாரணத்திற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் பாத்தியனூர் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கச் சென்ற தந்தையும், மகனும் தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தின் காரணமாக தற்கொலைக்கு முயன்று அதில் மகன் இறந்து போனதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. எனவே இன்னும் காவல் நிலையத்தை கண்டு பயப்படும் நிலை உள்ளது.

ஜெயலலிதா: எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பத்திரிகைகளில் வந்த ஒரு செய்தியை வாசிக்கிறார். பாலமுருகன் என்ற அந்த இளைஞன் தற்கொலை செய்து கொள்வதற்கு என்ன காரணம் என்று தெரியாது. காவல் துறையினர்தான் காரணம் என்பதற்கு ஆதாரம் எதுவும் இவரிடம் இல்லை. இது பற்றி முறையாக இவர் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தால் அந்த மாவட்ட காவல் துறை அதிகாரி மற்றும் அந்த காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோருடன் உரிய முறையில் விசாரித்து அரசு உண்மை நிலை குறித்து அறிக்கை வெளியிடும்.

பண்ருட்டி ராமச்சந்திரன்: முதலமைச்சருக்கு நன்றி. காவல் நிலையங்களின் மீது சாதாரண மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்றுதான் கூறினேன். சிபி சக்கரவர்த்தி காலத்தில் வல்லூரு ஒன்று புறாவை துரத்த அந்த புறா மன்னன் நமக்கு அடைக்கலம் தருவார் என்ற நம்பிக்கையுடன்தான் அவரிடம் தஞ்சமடைந்தது. அவர் ரசம் வைத்து சாப்பிட்டு விடுவார் என்றால் அங்கு சென்றிருக்குமா?

ஜெயலலிதா: எதிர்க்கட்சி துணைத் தலைவர் புராண காலத்தை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் ராமாயணத்தை பற்றி பேசினார். இப்போது சிபி சக்கரவர்த்தி கதை பற்றி சொல்கிறார். தற்போது நவீன காலம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த காலத்தில் காவல் துறை எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து விவாதிக்க வேண்டும்.

பண்ருட்டி ராமச்சந்திரன்: கதையை மட்டும் பார்க்கக் கூடாது. அதன் பின்னால் உள்ள கருத்தையும் பார்க்க வேண்டும். காவல் துறையினரால் பணக்காரர்கள் எவரும் பாதிப்புக்கு ஆளாவதில்லை. சாதாரண ஏழை மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்.

ஜெயலலிதா: பணக்காரர்கள் யாரும் காவல் நிலையத்திற்கே செல்வதில்லை. சாதாரண மக்கள்தான் செல்கின்றனர். சாமானியர்களுக்கு காவல் நிலையம் உறுதுணையாக இருக்கிறது.

பண்ருட்டி ராமச்சந்திரன்: காவல் நிலைய மரணங்கள் குறித்து முதலமைச்சர் இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே 4 பேர் மரணம் என குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் 11 பேர் மரணமடைந்துள்ளதாக எங்களுக்கு தெரிய வந்துள்ளது.

ஜெயலலிதா: நாங்கள் ஆட்சிக்கு வந்த 11 மாதங்களில் ஒரு சில வழக்கில் சாட்சிகளை விசாரணைக்கு அழைத்து சென்றபோது நடைபெற்ற நிகழ்வுகளின் மூலம் 4 பேர் மரணமடைந்ததாகத்தான் அரசு தரப்பில் தகவல் உள்ளது. இவர் 11 பேர் மரணம் என்கிறார். அரசுக்கு வராத தகவல் எப்படி இவருக்கு கிடைத்தது. இதற்கு என்ன ஆதாரம்?

காவல் துறையினர் வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லும் போதும், வழி காவலின் போதும் எதிர்பாராதவிதமாகவும், நோய் காரணமாக மருத்துவமனைக்கு அனுப்பும் போதும் திருடர்கள் என நினைத்து மக்கள் சிலரை தாக்கி அவர்கள் காவல் நிலையம் வரும் போதும் காவல் நிலைய விசாரணைக்கு பிறகு வீடு திரும்பியவர்கள் தற்கொலை செய்து கொண்டாலோ அல்லது உடல்நலக்குறைவு காரணமாக இறந்தாலோ அதையெல்லாம் காவல் நிலைய மரணம் என்று சொல்லி விடுகிறார்கள்.

இது தொடர்பாக ஒரு பாரபட்சமற்ற குற்றவியல் நடுவர் விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறோம். அதில் காவல் துறையினர் மீது தவறு இருந்ததாக தெரிய வந்தால் தகுந்த நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. காவல் துறையினரும் பாதுகாப்புடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியிருக்கிறோம்.

பண்ருட்டி ராமச்சந்திரன்: சாலை விபத்துகள் தமிழகத்தில் அதிகம் நடைபெறுகிறது. உயிரிழப்பும் இங்கு அதிக அளவில் ஏற்படுகிறது.

ஜெயலலிதா: தமிழகத்தில் வாகன எண்ணிக்கைகள்தான் அதிகரித்துள்ளது. சாலை விபத்துக்களும், உயிரிழப்புகளும் குறைந்த அளவில்தான் ஏற்பட்டிருக்கிறது.

இவ்வாறு இந்த விவாதம் நடைபெற்றது.

மேலும் முதல்வர் கூறுகையில், போலீசார் ஓய்வு பெற்ற பிறகு சொந்த வீட்டில் வசிக்க திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், தர்மபுரியில் ஆசிரியரை தாக்கிய டி.எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+