மதுரையில் 'தாமரைச் சங்கமம்'... பட்டையைக் கிளப்பத் தயாராகும் பாஜக!

நாடாளுமன்ற கட்டட வடிவில் மாநாட்டு நுழைவாயிலை அமைத்துள்ளனர். மாநாடு தொடர்பான ஏற்பாடுகளை மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு முடுக்கி விட்டார்.
பாஜகவின் 5வது மாநில மாநாடு தாமரைச் சங்கம் என்ற பெயரில் ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மதுரையில் நடைபெறுகிறது. இதற்காக விரகனூர் ரிங் ரோட்டில் பிரமாண்ட பந்தல் அமைக்கின்றனர்.
நாடாளுமன்ற கட்டட வடிவில் மாநாட்டு முகப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக சட்டசபை கட்டடம், ராஜாஜி அரங்கம் ஆகியவற்றின் வடிவிலும் நுழைவாயிலில் செட் போட்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் பாஜக மூ்த்த தலைவர் அத்வானி, பாஜக தலைவர் நிதின் கத்காரி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்ட அகில இந்தியத் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
முதல் நாள் பொது மாநாடாகவும், அடுத்த நாள் பொதுக்குழுக் கூட்டமும் நடைபெறுகிறது. மாநாட்டில் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று பாஜகவினர் நம்பிக்கையுடன் கூறுகின்றனர். அந்த அளவுக்கு ஏற்பாடுகள் தடபுடலாக இருக்கிறதாம்.
பரதநாட்டியம், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.
மாநாட்டுக்கு மத்திய போலீஸ் படை பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இந்த படையின் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் நேற்றே மதுரை வந்து விட்டார். அவர் மதுரை காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஏற்கனவே அத்வானி தனது ரத யாத்திரையை மதுரை பக்கம் மேற்கொண்டபோது திருமங்கலம் அருகே பைப் வெடிகுண்டு மூலம் அவரைத் தீர்த்துக் கட்ட சதி நடந்தது. ஆனால் பைப் வெடிகுண்டு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. எனவே மதுரை பாஜக மாநாட்டுக்கு மிக பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளதாம்.












Click it and Unblock the Notifications