சித்த, ஆயுர்வேத கல்லூரிகள் இயங்க திமுக மத்திய அமைச்சர் உதவவில்லை: அமைச்சர் விஜய்
சென்னை: மத்தியில் சுகாதாரத்துறை அமைச்சராக திமுகவைச் சேர்ந்த ஒருவர் இருந்தும், மக்களுக்கு சேவை செய்வதாக வாய் கிழிய கூறும் திமுகவும், காங்கிரசும் பாளை, கோட்டாறு சித்த, ஆயுர்வேத கல்லூரிகளுக்கு அனுமதி பெற எந்த ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் குற்றம் சாட்டினார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி தொடர்ந்து இயங்குமா? என்று புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, கோட்டாறு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி தொடர்ந்து இயங்குமா? என்று கேட்டு அதிமுக எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் ஆகியோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதற்கு பதிலளித்துப் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜய், கடந்த திமுக ஆட்சியில் பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரியும், கோட்டாறு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியும் தொடங்கப்பட்டன. ஆனால் அங்கு அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறையின் ஆயுஷ் ஆய்வு நிறுவனம் இவற்றுக்கு அனுமதி வழங்க மறுத்து விட்டது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் வழக்கு தொடர்ந்ததையடுத்து மாணவர் சேர்க்கைக்கும் தொடர்ந்து கல்லூரியை நடத்தவும் உயர் நீதிமன்றம் ஆணை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் வகுப்புகள் நடந்து வருகின்றன.
நீதிமன்ற உத்தரவுடிப்படிதான் இந்தக் கல்லூரிகள் நடத்தப்படுகின்றன. மத்திய ஆட்சியில் திமுகவும் காங்கிரசும் கூட்டணியாக உள்ளன. ஆனால் இதற்கு நிரந்தர தீர்வு காண அவர்கள் எந்த ஒத்துழைப்பும் தரவில்லை.
திமுக அமைச்சர் ஒருவர் தான் மத்தியில் இந்தத் துறைக்கு பொறுப்பு வகிக்கிறார். மக்களுக்கு சேவை செய்வதாக வாய் கிழிய கூறும் திமுகவும், காங்கிரசும் இந்தக் கல்லூரிகளுக்கு அனுமதி பெற எந்த ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை.
தமிழ் பாரம்பரிய மருத்துவமனை சித்த, ஆயுர்வேத கல்லூரிகளுக்கு உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டை அணுக ஆயுஷ் முயற்சி செய்து வருகிறது.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சரை நான் நேரில் சந்தித்துப் பேசினேன். சம்பந்தப்பட்ட தொகுதியைச் சேர்ந்த எம்.பியிடமும் பேசினேன்.
இந்த 2 கல்லூரிகளிலும் அடிப்படை வசதி உள்பட அனைத்து வசதிகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோட்டாறு ஆயுர்வேத கல்லூரி உள்கட்டமைப்பு ரூ.10 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளது. எனவே அந்த கல்லூரி தொடர்ந்து இயங்குவது நீதிமன்றத் தீர்ப்பிலும் மத்திய சுகாதாரத்துறை நடவடிக்கையிலும்தான் உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications