அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கு: திவாகரன் ஜாமீன் மனு தள்ளுபடி
சசிகலாவின் தம்பி திவாகரன் மீது அரசு அதிகாரி முத்துமணி என்பவர் பந்தநல்லூர் போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில், சசிகலாவின் தம்பி திவாகரன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் தஞ்சை மாவட்டம் பந்தநல்லூரில் கொள்ளிடம் ஆற்றின் தென்கரையை சேதப்படுத்தி ஆற்று மணல் அள்ளினர். தட்டிக்கேட்ட எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி திவாகரன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி திவாகரன் தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி தங்கராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் இதே வழக்கில் ஜாமீன் கோரி கார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.