அணு உலைக்கு எதிராக கையெழுத்திடாதவர்களை மிரட்டியதாக உதயகுமார் உள்பட 10 பேர் மீது வழக்கு

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக போராட்டக்காரர்கள் இடிந்தகைரயில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே முதலாவது அணு உலையில் இன்னும் 40 நாட்களில் மின் உற்பத்தி துவங்கும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மின் உற்பத்தியை விரைவில் துவங்குவதற்காக அணு மின் நிலைய ஊழியர்கள் இரவு பகல் பாராது பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில் அணு மின் நிலையப் பணிகளை முடக்க போராட்டக்காரர்கள் பல்வேறு செயல்களில் ஈடுபட்டுள்ளனர். கூடங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை சந்தி்த்து அணு மின் நிலையத்தை மூட கையெழுத்து வாங்கி வருகிறார்கள்.
இதற்கிடையே செட்டிகுளத்தை சேர்ந்த 2 பேர், கூடங்குளத்தை சேர்ந்த 4 பேர், வைராவிகிணறை சேர்ந்த ஒருவர் ஆகியோர் கூடங்குளம் காவல் நிலையத்திலும், உவரியை சேர்ந்த 2 மீனவர்கள் உவரி காவல் நிலையத்திலும் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது புகார் கொடுத்துள்ளனர்.
அந்த புகார் மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,
அணுமின் நிலையத்திற்கு எதிராக கையெழுத்திட மறுத்ததால் எங்களை போராட்டக்காரர்கள் மிரட்டுகின்றனர். மீனவர் சங்கத்தில் இருந்து நீக்கி விடுவதாகவும், அரசின் சலுகைகள் கிடைக்கவிடாமல் தடுத்துவிடுவோம் என்றும் மிரட்டுகின்றனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் அதில் தெரிவித்திருந்தனர்.
அவர்களின் புகாரின்பேரில் போலீசார் போராட்டக்குழு தலைவர் உதயகுமார் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications