க..ன்னா கத்தி, கு..ன்னா குண்டு... இது உ.பி. ஸ்கூல் ஸ்டைல்!
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சில துவக்கப் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் புத்தகங்களில் ஏ பார் ஆப்பிள், பி பார் பால் என்பதை வித்தியாசமாக மாற்றி எழுதியுள்ளனர். அதாவது பி பார் பாம், சி பார் சாக்கு அதாவது கத்தி என்று எழுதியுள்ளனராம்.
அதைவிடக் கொடுமையாக 8ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தேசியக் கொடியை தலைகீழாகப் போட்டு மக்களை டென்ஷனாக்கியுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சில அரசு மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் கதிகலங்கிப் போயுள்ளனர். 8ம் வகுப்பு புத்தகத்தில் குறைந்தது 5 இடங்களிலாவது நம் தேசியக் கொடி தலைகீழாக அச்சிடப்பட்டுள்ளது. பள்ளிக் குழந்தைகளுக்கு நாட்டுப்பற்றை போதிக்கும் புத்தகங்களில் தேசியக்கொடி தலைகீழாக உள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
இந்த புத்தகங்களை டெல்லியில் உள்ள குருகுல் பப்ளிகேஷன்ஸ் அச்சிட்டுள்ளது. அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டதற்கு அந்த புத்தகங்களை மார்க்கெட்டில் இருந்து வாபஸ் பெற்றுவிட்டோம் என்றனர்.
இது ஒரு பெருங்குற்றமாகும். பதிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மொராதாபாத் மாவட்ட கல்வி அதிகாரி பால் முகுந்த் தெரிவித்தார். மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தான் இந்த புத்தகம் பயன்படுத்தப்படுகிறது.
இது தவிர பல துவக்கப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் பயன்படுத்தும் புத்தகங்களில் பி ஃபார் பாம்(வெடிகுண்டு), சி ஃபார் சாக்கு(கத்தி) என்று இந்தியில் உள்ளதை அப்படியே குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கிறார்கள். ஆலோக் ஷப்த் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த புத்தகத்தில் தான் இந்த கூத்தெல்லாம் உள்ளது. புத்தகத்தைப் பார்த்த பெற்றோர்கள் அதிர்ந்துபோய் பள்ளி முதல்வர்களிடம் புகார் கூறினால் அவர்கள் பதிப்பாளர்கள் மீது பழியைப் போடுகிறார்கள்.
பி ஃபார் பாம் என்று அச்சடித்த பெருமை பிரிஸம் ஹவுஸ் பப்ளிகேஷனைச் சேரும். குழந்தைகளுக்கு எப்படி இதுபோன்ற வார்த்தைகளை கற்றுத் தரலாம் என்று ஸ்ருதி அஹுஜா என்ற பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து 2 குழந்தைகளின் தாயும், ஆசிரியையுமான ஆர்த்தி மிஸ்ரா அவஸ்தி கூறுகையில்,
இதுபோன்ற வார்த்தைகள் எல்லாம் எப்படி பாடப்புத்தகத்தில் வந்தது என்று வியப்பாக உள்ளது. பள்ளி நிர்வாகத்திற்கு கமிஷன் கொடுத்து பப்ளிஷர்கள் இதுபோன்ற புத்தகங்களை தள்ளிவிட்டிருப்பார்கள் என்றார்.
32 பக்கங்கள் கொண்ட அந்த புத்தகத்தை அச்சிட்ட பதிப்பகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிஎஸ்இ பாடத்திட்ட அதிகாரி ஜாவித் ஆலம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications