திருப்பதி லட்டை வைத்து பட்டை நாமம் போட்ட ஊழியர்கள் கைது
திருப்பதி: திருப்பதிக்கே லட்டா என்பார்கள். உண்மையிலேயே அப்படி நடந்துள்ளது. திருமலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாத லட்டுகளை கிள்ளி கிள்ளி எடுத்து புது லட்டு தயாரித்து விற்ற 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பதி என்றாலே லட்டுதான்! சிறிய அளவிலான இலட்டு இலவசமாகவும் தரிசன டிக்கெட்டுக்கு ஏற்பவும் லட்டு வழங்கப்படும். இதற்கென தனித்தனியே கவுண்டர்களும் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் ஒரே ஒரு கவுண்ட்டரில் மட்டும் வழங்கப்படும் லட்டின் எடை அளவு மிகவும் குறைவாக இருக்கிறது என்று தேவஸ்தான நிர்வாகத்துக்கு தினந்தோறும் புகார்கல் சென்று கொண்டே இருந்தன.
இதையடுத்து நாள்தோறும் அந்த கவுண்ட்டரை கண்காணித்து வந்த அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். சோதனையில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் காத்திருந்தது! கொடுக்கப்பட்ட லட்டுகளின் எண்ணிக்கையைவிட கூடுதலாக 25 லட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கூடுதலாக லட்டு வந்தது எப்படி என்று கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
அதில்தான் பக்தர்களுக்கு நாமம் போட்ட கதையை ஒப்பித்துள்ளனர் பிராடு ஊழியர்கள். தேவஸ்தானம் கொடுக்கும் லட்டு ஒவ்வொன்றிலும் ஒரு குறிப்பிட்ட அளவு கிள்ளி தனியே எடுத்து வைத்து சேகரித்து அதையே ஒவ்வொரு லட்டாக்கியுள்ளனர்.
பக்தர்களுக்கு கொடுக்க வேண்டிய அளவைக் குறைத்து அதிலிருந்து புதியதாக பிராடு ஊழியர்களே தனியே லட்டு தயாரித்து விற்று மோசடி செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து 2 ஊழியர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications