8 சென்ட் இடத்தை மு.க.அழகிரி 'அபேஸ்' செய்து விட்டதாக மதுரை மேயர் புகார்!

மதுரை மாநகராட்சிக் கூட்டம் நடந்தது. மேயர் ராஜன் செல்லப்பா தலைமை தாங்கினார்.
முதலில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்தத் தீர்மானத்தில், மதுரை மாநகராட்சி வரலாற்றிலேயே, ரூ.250 கோடி சிறப்பு நிதி வழங்கியதற்காக கவுன்சிலர்கள் மற்றும் மதுரை மக்கள் சார்பில் நன்றி முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து மண்டலத் தலைவரான அதிமுகவைச் சேர்ந்த ராஜபாண்டியனை பேச அழைத்தார் மேயர். ஆனால் எதிர்க்கட்சித் தலைவரான திமுகவின் ராஜ் மற்றும் அக்கட்சி கவுன்சிலர்களான முபாரக் மந்திரி, அருண்குமார் உள்ளிட்டோர் எழுந்து நின்று எதிர்க்கட்சித் தலைவரைத்தான் மரபுப்படி முதலில் பேச அழைக்க வேண்டும் என்று கூறி கோஷமிட்டனர். ஆனால் அதை மேயர் ஏற்கவில்லை.
இதையடுத்து வாயில் கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைப் பார்த்து கோபமடைந்த ராஜன் செல்லப்பா அனைவரையும் வெளியேறுங்கள் என்று உத்தரவிட்டார். ஆனால் அவர்கள் போகாமல் நின்றபடி இருந்தனர். இதையடுத்து அவைக் காவலர்களை அழைத்து அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்டார். அன்படி காவலர்கள் உள்ளே வந்து திமுக கவுன்சிலர்களை வெளியேற்றினர்.
பின்னர் மண்டலத் தலைவர் சாலைமுத்து பேசுகையில், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் தயா சைபர் பார்க், சுமார் 8 சென்ட் இடத்தை ஆக்கிரமித்து இருந்தது. அந்த இடத்தை தற்போது மாநகராட்சி கைப்பற்றி, அங்கு போர்டு ஒன்றும் வைத்து உள்ளது. அதாவது அவர் அபகரித்த இடத்தை மீண்டும் மாநகராட்சி தன்வசப்படுத்தி உள்ளது. எனவே இது நில அபகரிப்பு தானே என்று கேட்டார். அதற்கு ஆமாம் என்றார் ஆணையர்.
இதைத் தொடர்ந்து, அப்படியென்றால் போலீசில் புகார் செய்ய வேண்டியது தானே? எப்போது புகார் செய்யப் போகிறீர்கள்? என்று வினவினார் சாலை முத்து. அதற்குப் பதிலளித்த ராஜன் செல்லப்பா, இதுகுறித்து விரைவில் போலீஸில் புகார் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து விரைவில் மு.க.அழகிரி மீது போலீஸில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
நிலத்தை அபகரிக்கவில்லை: முன்னாள் துணை மேயர்கள் பேட்டி:
இந் நிலையில் முன்னாள் தி.மு.க. துணை மேயர்கள் மன்னன், கவுஸ்பாட்சா, மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் எம்.எல்ராஜ் ஆகியோர் கூட்டாக இன்று மதுரை தயா சைபர் பார்க்கில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறுகையில்,
தயா சைபர் பார்க் முன்பகுதியில் உள்ள 8 சென்ட் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளதாக மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மத்திய அமைச்சர் அழகிரி மீது நில அபகரிப்பு விரைவில் புகார் செய்யப்படும் என மேயர் ராஜன்செல்லப்பா அறிவித்துள்ளார்.
தயா சைபர் பார்க்கின் முன் பகுதியில் உள்ள இடத்தை எந்தவித கட்டிடமோ பயன்பாட்டிற்காகவோ எடுக்கவில்லை. கடந்த 27.6.2006 அன்று மதுரை மாநகராட்சி கமிஷனரிடம் இந்த இடத்தில் பூங்கா அமைத்து பராமரிக்க அனுமதி வழங்க விண்ணப்பித்தோம்.
அப்போதைய மாநகராட்சி கமிஷனர் தினகரன் 21.12.2006 அன்று இதற்கு அனுமதி வழங்கியுள்ளார். அந்த அனுமதியில் 10.5 சென்ட் இடத்தில் பூங்கா அமைத்து பராமரித்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. கட்டிடம் ஏதும் கட்டக்கூடாது. அந்த இடத்தில் சொந்தம் கொண்டாட உரிமை கிடையாது. சம்பந்தப்பட்ட இடத்தில் தனது சொந்த செலவில் பூங்கா அமைத்து கொள்ள வேண்டும். மேற்கண்ட இடம் தேவைப்படும் பட்சத்தில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மாநகராட்சி ஆணையாளருக்கு எடுத்துக்கொள்ள முழு அதிகாரம் உள்ளது.
இந்த நிபந்தனைகளுடன்தான் அந்த இடம் தயா சைபர் பார்க்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. நிபந்தனையின் அடிப்படையில்தான் அங்கே பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. கட்டிடம் ஏதும் கட்டவில்லை. அந்த இடத்தை எடுக்க மாநகராட்சி விருப்பப்பட்டால் சட்டத்தின் மூலம் எடுக்கலாமே தவிர ஒரு பொய்யான புகாரை ஜோடிக்கக் கூடாது.
தற்போது மதுரை மாநகராட்சியில் பொறுப்பு அதிகாரிகள்தான் உள்ளனர். இதனால் நிர்வாகம் சீரழிந்துள்ளது. மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் பேச அனுமதி மறுக்கப்படுகிறது.
மாநகராட்சி மூலம் அதிமுகவனர் குறைந்த விலையில் ஏலம் எடுக்கின்றனர். இதனால் மாநகராட்சிக்கு பல லட்ச ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்துகின்றனர் என்றனர்.












Click it and Unblock the Notifications