தொடர் மழையால் மதுரை பாஜக மாநாடு திடீர் தள்ளிவைப்பு!

இந்த மாநாட்டை மே 12-13 ஆகிய தேதிகளில் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இருப்பினும் இறுதியான தேதி குறித்த விவரம் இன்று அறிவிக்கப்படும்.
தாமரைச் சங்கமம் என்ற பெயரில் மதுரையில் நாளையும்,நாளை மறு நாளும் மாநில மாநாட்டை நடத்த பாஜக திட்டமிட்டிருந்தது. இதற்காக வரலாறு காணாத வகையில் பிரமாண்ட ஏற்பாடுகளையும் பாஜக செய்து வந்தது. விரகனூர் ரிங் ரோட்டில் பிரமாண்ட பந்தல், பிரமாண்டமான முகப்பு அலங்காரம் உள்ளிட்டவை களை கட்டியிருந்தன.
இந்த மாநாட்டில் பாஜக தலைவர் நிதின் கத்காரி, மூத்த தலைவர் அத்வானி மற்றும் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தன.
ஆனால் மதுரையில் கடந்த 3 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள குறைநத் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மதுரை உள்பட தென் தமிழகம் முழுவதும் நலல் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பாஜகவின் மாநாடு பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநாட்டை தள்ளி வைத்துள்ளனர்.
இதுகுறித்து மாநில பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மதுரையில் ஏப்ரல் 28, 29-ந் தேதிகளில் (சனி, ஞாயிறு)பா.ஜ.க. மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மாநாட்டுக்கு வரும் லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் மக்களுக்காக பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன.
ஆனால் தற்போது கனமழை பெய்து வருகிறது. மாநாட்டுக்காக அமைக்கப்பட்டு இருந்த உணவுக்கூடங்கள், கழிப்பறைகளில் தற்போது தண்ணீர் புகுந்துள்ளதால் மாநாடு நடத்துவதில் சற்று சிரமம் ஏற்பட்டு உள்ளது.
எனவே இந்த மாநாட்டை மே மாதம் 12, 13 ஆகிய தேதிகளில் நடத்தலாம் என நினைத்துள்ளோம். ஆனாலும் 14-ந் தேதி டெல்லியில் சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் நடைபெறுவதால் தலைவர்கள் வருவதில் சிரமம் ஏற்படுமா என்பது குறித்து ஆலோசித்து மாநாட்டுக்கான தேதி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும்.
எனவே பொதுமக்களும், தொண்டர்களும் சிரமத்தை பொறுத்துக்கொண்டு, தொடர்ந்து ஆதரவு தர வேண்டுகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications