தொடர் விடுமுறைகள்- திருப்பதியில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
திருப்பதி: தொடர் விடுமுறைகளால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.இதனால் சாமி தரிசனம் செய்ய 28 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சனி, ஞாயிறு விடுமுறைகளைத் தொடர்ந்து மேதின விடுமுறையும் வருவதால் திருப்பதி கோயிலில் கூட்டம் அலைமோதுகிறது. வெள்ளிக்கிழமை முதல் கூட்டம் கட்டுக்கடாங்கமல் குவிந்து கொண்டே இருக்கிறது. திருப்பதியில் அனைத்து விடுதிகளிலும் அறைகள் நிரம்பிவிட்டன.
இலவச வரிசையில் சாமி தரிசனம் செய்ய 28 மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலைமை உள்ளது. கட்டண தரிசனத்தைப் பொறுத்தவரையில் 50 ரூபாய் சாமி தரிசனம் செய்வோர் 20 மணி நேரமும், 300 ரூபாய் கட்டணத்தில் சாமி தரிசனம் செய்வோர் 7 மணிநேரமும் காத்திருக்கின்றனர். பாதயாத்திரையாக செல்வோர் 6 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணி முதல் நள்ளிரவு வரை இதுவரையில்லாத அளவாக 1 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். இதேபோல் மொட்டை எடுக்கும் இடம் மற்றும் பிரசாதமான லட்டு தரும் கவுண்டர்களிலும் கடுமையான நெரிசல் உள்ளது.
லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து திரும்புவதால் பேருந்துகளுக்கும் பஞ்சம் ஏற்பட்டது. தனியார் வாகனங்கள் தங்களது இஷ்டத்துக்கு கட்டண வசூல் வேட்டை நடத்தினர்.












Click it and Unblock the Notifications