மக்களவையில் தொடரும் தெலுங்கானா முழக்கம்
டெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் தெலுங்கானா தனிமாநிலம் கோரி அப்பிரதேச எம்.பி.க்கள் தொடர் முழக்கங்களை எழுப்பியதால் அவை நடவடிக்கைகள் பாதிப்புக்குள்ளாகின.
இன்று காலை மக்களவை கூடியதும் தெலுங்கானா தனிமாநிலம் கோரி அப்பகுதி எம்.பிக்கள் தரையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். தெலுங்கானா கோரும் பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர். சபாநாயகர் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தபோதும் முழக்கங்கள் ஓயவில்லை.
அப்போது பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ் எழுந்து, 10 நிமிடமாவது கேள்வி நேரத்தை ஒத்திவைத்து தெலுங்கானா பற்றி விவாதிக்க வேண்டும் என்றார். மேலும் தெலுங்கானா தனிமாநிலம் அமைக்க அரசு முன்வருமேயானால் பாரதிய ஜனதா கட்சி அதை ஆதரிக்கும் என்றார்.
இருப்பினும் எம்.பிக்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் அவை நடவடிக்கைகள் பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
தெலுங்கானா தனிமாநிலம் கோரி முழக்கங்களை எழுப்பி வந்த அப்பகுதி காங்கிரஸ் எம்.பிக்கள் 8 பேர் கடந்த வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications