முட்டத்தில் மீண்டும் மோதல்: கவுன்சிலர் உள்பட 15 பேர் மீது வழக்கு
குமரி: முட்டத்தில் நேற்று மீண்டும் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட கவுன்சிலர் உள்பட இருதரப்பைச் சேர்ந்த 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குமரி மாவட்டம் முட்டம் மீனவ கிராமத்தில் பங்கு பேரவை தேர்தலையொட்டி ஏற்பட்ட மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. அவ்வப்போது இரு தரப்பினரிடையே மோதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த மோதலில் அரிவாள் வெட்டு, வெடிகுண்டு வீச்சு சம்பவங்களும் நடந்து இருக்கின்றன. கடந்த மாதம் நடந்த மோதலைத் தொடர்ந்து படகுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை செயல் இழக்க செய்தபோது ஒரு குண்டு வெடித்து சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
முட்டத்தில் தொடர்ந்து நடந்து வரும் மோதல் சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கடந்த 22ம் தேதி அமைச்சர் பச்சைமால் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி ஏப்ரல் 29ம் தேதி இருதரப்பினரும் தங்களிடம் உள்ள ஆயுதங்களை ஒப்படைப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முட்டத்தில் கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி மைய இயக்குனர் கில்ட்ஸ், பங்கு தந்தைகள் ராஜ், ஆலோசியஸ் மற்றும் அமைதி குழுவினர் முன்னிலையில் இருதரப்பினரும் தங்களிடம் இருந்த 4 அரிவாள், 5 வீச்சரிவாள், 1 சூலாயுதம், 35 இரும்பு பைப், 40 சவுக்கு கம்பு உள்ளிட்டவற்றை ஒப்படைத்தனர்.
பிரச்சனை சுமூகமாக தீர்ந்தது என எண்ணி இருந்த நிலையில் நேற்று மாலை மேல முட்டம் பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவர் கீழமுட்டத்துக்கு சென்றார். அப்போது அவருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் ஜார்ஜ், எதிர்தரப்பைச் சேர்ந்த ஹெர்மின், ரமேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த இருதரப்பினரும் கடற்கரையில் திரண்டனர். இதனால் மீண்டும் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதல் சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் மாறி மாறி புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் இரு தரப்பினரைச் சேர்ந்தவர்களா மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மாவட்ட பஞ்சாய்தது கவுன்சிலர் சசியோன் உள்பட 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications