மசூதி இடிப்பைக் கண்டித்து இன்று இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம்: வைகோ
சென்னை: இலங்கையில் தம்புள்ளா பகுதியில் இருந்த பள்ளிவாசலை இடித்ததற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடைபெறும் இலங்கைத் துணைத் தூதரக முற்றுகைப் போராட்டத்தில் மதிமுக கலந்துகொள்ளும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இலங்கைத் தீவில் தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களை சிங்கள இனவாத அரசு தாக்குவதும், நாசப்படுத்துவதும் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு தொடக்கத்தில் இந்துக்களின் கோவில்களையும், பின்பு கிறிஸ்தவ தேவாலயங்களையும் நாசப்படுத்துகின்ற வேலைகளை ஊக்குவித்து வந்த சிங்கள அரசு தற்போது தமிழ் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் மசூதிகளைத் தாக்க ஆரம்பித்து உள்ளது.
கடந்த 20ம் தேதி கொழும்பில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில், தம்புள்ளா என்ற இடத்தில் உள்ள மசூதியை 2000க்கும் மேற்பட்ட புத்த பிக்குகள் வெறிக் கூச்சலுடன் முற்றுகை இட்டு, கடப்பாரை, சம்மட்டிகள் கொண்டு உடைத்து நாசம் செய்து உள்ளனர்.
இதனைக் கண்டித்து கடந்த 26ம் தேதி அம்பாறை மாவட்டம் முழுவதும் முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும், கொழும்பு நகரத்தின் மையப்பகுதியில் உள்ள மசூதிக்கு அருகில் கடந்த 27ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மசூதி தாக்கப்பட்ட மாத்தளை மாவட்டப் பகுதி, முன்பு இராஜராஜ சோழன் காலத்திலும், இராஜேந்திர சோழன் காலத்திலும், சோழர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது.
தமிழ் இன அழிப்பைக் குறிக்கோளாகக் கொண்டு அராஜகம் செய்து வருகின்ற சிங்கள இனவாதக் கட்சிகளும், இனவாத அரசும், இலங்கைத் தீவு முழுமையையும், பெளத்தமயமாக்கல், சிங்கள இன ஆதிக்கத்தை நிறுவுதல் என்ற நோக்கத்துடன் நடத்தி வரும் கொடுஞ் செயல்களுக்குக் கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவிக்க வரும் 30ம் தேதி (இன்று) மாலை 4.00 மணி அளவில் சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மனிதநேய மக்கள் கட்சி நடத்த உள்ளது. இப்போராட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் கலந்துகொள்ளும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications