மனோன்மணியம் பல்கலை-பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியர் சஸ்பெண்ட்!
திருநெல்வேலி: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக வேதியியல் துறை தலைவர் செல்லமணி பாலியல் புகார் காரணமாக பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பேராசிரியர் செல்லமணி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்வதாகக் கூறி மாணவ, மாணவியர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
3-வது நாளாக நீடித்த போராட்டத்தின் போது சென்னை பல்கலைக் கழக கூட்டுக்குழுத் தலைவரும் சட்ட செயலாளருமான ஜெயச்சந்திரனுடன் பல்கலைக் கழக ஆட்சிக் குழு உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து பல்கலைக் கழக பதிவாளர் மாணிக்கம்., மாணவ மாணவயிருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சர்ச்சைக்குரிய பேராசிரியர் செல்லமணி மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிட முடியும் என்று மாணவர்கள் தரப்பில் உறுதியாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சியர் இரா.செல்வராஜ் பல்கலைக் கழகத்துக்கு வந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மாணவர் தரப்பில் 15 பேர் கலந்து கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் செல்வராஜ், பேராசிரியர் செல்லமணியை 45 நாட்களுக்கு பணி இடைநீக்கம் செய்வதாக தெரிவித்தார்.
இருப்பினும் 45 நாட்களுக்குள் விசாரணை நடத்தி பேராசிரியர் செல்லமணியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை என்றனர் மாணவர்கள்.












Click it and Unblock the Notifications