துரோகிகள் உதவியுடன் அரசைக் கவிழ்க்க வெளிநாடுகள் சதி: மே தின விழாவில் மகிந்த புலம்பல்
கொழும்பு: உள்நாட்டு துரோகிகள் உதவியுடன் வெளிநாடுகள் தமது அரசாங்கத்தைக் கவிழ்க்க சதி செய்வதாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே புலம்பியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற மே தினப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
நாட்டின் கொழும்பு, யாழ்ப்பாணம், ஹட்டன், நுவரெலியா உட்பட அனைத்து இடங்களிலும் எந்த ஒரு பீதியும் இல்லாமலேயே மேதினக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. இதுதான் நாங்கள் பெற்றுக் கொடுத்திருக்கிற சுதந்திரமாகும்.
பயங்கரவாதத்தினால் பல ஆண்டுகளாக பின்னடைவை சந்தித்திருக்கும் நாட்டை கட்டியெழுப்புவதற்காக இங்கு வாழும் அனைவரும் ஒன்றாக கைகோர்க்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் இன்று மேதினத்தை கொண்டாடும் ஐக்கிய தேசியக் கட்சியினர் அவர்களது ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாண நூலகத்தை எரித்ததற்காக மன்னிப்பு கேட்டிருப்பார்கள் என்று நான் கருதுகிறேன்..
ஏகாதிபத்தியவாதிகள் தற்போது மனித உரிமைகள் என்ற போர்வையில் இலங்கையை அடிமைப்படுத்த நினைக்கிறார்கள். இறையாண்மை கொண்ட சுதந்திரமான நாடு இது. இங்கு வாழும் சிலரது சிந்தனை ஐரோப்பாவில் வாழ்வதைப் போல உணர்கின்றனர். அவர்கள்தான் இலங்கையைக் காட்டிக் கொடுக்கின்றனர். எங்களுக்கு ஜனநாயகம் மீது நம்பிக்கை இருக்கிறது. ஆனால் சூழ்ச்சிகல் மூலமாக வெளிநாட்டு சக்திகளின் உதவியுடன் எமது அரசைக் கவிழ்க்க ஒருபோதும் சந்தர்ப்பம் கொடுக்க மாட்டோம் என்றார் மகிந்த ராஜபக்சே.












Click it and Unblock the Notifications