நித்தியானந்தாவை நீக்கக் கோரி தொடர் உண்ணாவிரதம்-அறுபத்து மூவர் அறக்கட்டளை
நெல்லை: நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக நியமனம் செய்ததை உடனே திரும்பப் பெற வேண்டும். மதுரை ஆதீனம் மாற வேண்டும். இதை வலியுறுத்தி மதுரை ஆதீன மடம் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக நெல்லை அறுபத்து மூவர் அறக்கட்டளை அறிவித்துள்ளது.
நெல்லை டவுன் பார்வதி சேஷ மகாலில் நேற்று இந்த அறக்கட்டளை சார்பில் கூட்டுப்பிரார்த்தனை நடந்தது. இதை அறக்கட்டளைத் தலைவர் ஆதிசிவஞானம் நடத்தினார். இதில் சைவ வேளாளர் பேரவைத் தலைவர் முத்துச் செல்வம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
பின்னர் ஆதிசிவஞானம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மதுரை ஆதீனத்திற்கு பல பெருமைகள் உள்ளது. இந்த ஆதீனத்தின் தற்போதைய ஆதீனம் விதிமுறைக்கு மாறாக அடுத்த ஆதீனமாக நித்தியானந்தாவை நியமித்து உள்ளார்.
பெருமட விதிகளின்படி ஓலை சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ள நபரை தேடி சென்று நியமிக்கவேண்டும். அதுவும் 12 வயதுக்கு உட்பட்ட நபரைத்தான் நியமிக்கவேண்டும். நித்தியானந்தாவை நியமித்து இருப்பதை உடனே திரும்ப பெறவேண்டும். இல்லை எனில் இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடருவோம்.
மதுரை ஆதீன மீட்புக்குழு ஒன்று அமைத்து உள்ளோம். அந்த அமைப்பின் மூலம் நித்தியானந்தாவை நியமித்ததை மாற்ற கோரி வருகிற 20-ந்தேதி சிவ ஆலயங்களில் உண்ணாவிரதம் இருப்போம். 27-ந்தேதி மதுரை ஆதீன மடத்தின் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம். அதிலும் மதுரை ஆதீனம் மனம் மாறவில்லை எனில் அவரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications