பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் விண்ணப்பங்கள் 11-ந் தேதி முதல் வழங்கப்படும்: மன்னர் ஜவஹர்

நாமக்கல் அருகே ராசிபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பொறியியல் படிப்புக்கு கடந்த ஆண்டு 1 லட்சத்து 60 ஆயிரம் இடங்கள் இருந்தன. அதில் 45 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன. இந்த ஆண்டு புதிதாக கல்லூரிகள் தொடங்கப்படுவதாலும், கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படுவதாலும், கல்லூரிகளில் இன்டேக் இடங்கள் கேட்டு இருப்பதாலும் இடங்களின் எண்ணிக்கை கூடுதலாகும் வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் ஆர்க்கிடெக்சர், எம்.பி.ஏ. போன்ற படிப்புகளுக்கு 29 கல்லூரிகளும், பொறியியல் படிப்புக்கு 525 கல்லூரிகளும் உள்பட 554 கல்லூரிகள் உள்ளன. ஏ.ஐ.சி.டி.இ. இடமிருந்து இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் இடங்களி விவரம் தெரிந்துவிடும். அதன்பிறகு தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு எத்தனை இடங்கள் உள்ளன என்பது தெரியும்.
அதிக இடங்கள் இருப்பதால் இந்த ஆண்டு பொறியியல் படிப்பு படிக்க விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இடம் கிடைக்கும். பொறியியல் படிப்புக்கு சென்ற ஆண்டு இருந்த கல்வித்தகுதியே இந்த ஆண்டும் நீடிக்கும். சென்னையில் மட்டும் கவுன்சிலிங் நடத்தப்படும். மருத்துவ படிப்புக்கு கவுன்சிலிங் தேதி அறிவித்தபிறகு அதற்கு ஏற்றாற்போல் பொறியியல் படிப்புக்கு கவுன்சிலிங் நடத்தப்படும்.
கவுன்சிலிங் எப்போது?
ஆனால் அதற்குரிய தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. கவுன்சிலிங் தேதியை அதற்கான குழுதான் முடிவு செய்யும். பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி தள்ளிப்போவதால் பொறியியல் கவுன்சிலிங் தேதி தள்ளிப் போகும் என்று சொல்ல முடியாது.
பொறியியல் படிப்புக்கு வருகிற 11-ந் தேதி முதல் 31-ந் தேதி முடிய விண்ணப்பங்கள் வழங்கப்படும். தமிழகத்தில் 58 மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுவதால் அனைவரும் சிரமமின்றி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். தினந்தோறும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
விண்ணப்ப படிவங்களை பொதுபிரிவினர் ரூ.500 கட்டணமும், எஸ்.சி.-எஸ்.டி. பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.250-ம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இதற்காக எஸ்.சி.-எஸ்.டி. பிரிவினர் தங்களது நிரந்தர சாதிச் சான்றிதழின் நகலை அளிக்க வேண்டும். இந்த ஆண்டு 2 லட்சம் விண்ணப்பங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.












Click it and Unblock the Notifications