மதுரை ஆதீனத்தின் செயலாளர் வைஷ்ணவியிடம் விசாரணை நடத்திய ஐடி அதிகாரிகள்

தமிழகத்தில் மொத்தம் 18 ஆதீன மடங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மதுரை ஆதீனமும் ஒன்று. இந்த ஆதீனம் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மதுரை ஆதீனத்திற்கு தமிழகம் முழுக்க பல கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளது.
இந்த ஆதீனத்தின் 293-வது மடாதிபதியாக நித்யானந்தா-வை 292 வது மதுரை ஆதீனம் அருணகிரி நியமித்துள்ளார். இதற்காக ரூ.1 கோடி வரை செலவு செய்துள்ளார் நித்யானந்தா. மேலும் ரூ 4 கோடியை மதுரை ஆதீனத்துக்கு காணிக்கையாக தருவதாகவும் அறிவித்துள்ளார்.
பல்வேறு சர்ச்சைகள் மற்றும் வழக்குகளில் சிக்கியுள்ள நித்யானந்தாவை மடாதிபதியாக நியமித்துள்ளதற்கு தமிழகத்தில் உல்ள பல்வேறு ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை மற்றும் மதுரை நீதிமன்றங்களில் வழக்குகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், மத்திய அரசின் வருமான வரித்துறை மதுரை ஆதீனத்தில் நேற்று காலை முதல் பிற்பகல் வரை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
மண்டல இணைக் கமிஷனர் தலைமையில் 7 அதிகாரிகள் குழு இந்த சோதனையை பிற்பகல் 1.30 மணி வரை நடத்தியது. இந்த சோதனையின்போது சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. கணக்கில் வராத பணம் ஏதும் சிக்கியதா என்பது குறித்துத் தெரியவில்லை.
சோதனையின்போது மதுரை ஆதீனம் அங்குதான் இருந்தார். ஆனால் நித்தியானந்தா இல்லை என்று தெரிகிறது.
இந்த சோதனையின்போது சர்ச்சைக்குரிய இளம் பெண் வைஷ்ணவியும் அங்குதான் இருந்தார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. இவரை இடையில் காணவில்லை என்று பரபரப்பு கிளம்பியது. ஆனால் வைஷ்ணவி தொடர்ந்து அங்குதான் இருப்பதாக தெரிகிறது. நேற்று நடந்த சோதனையின்போது வைஷ்ணவியையும் அதிகாரிகள் விசாரித்துள்ளனர். அப்போது அவரிடமிருந்து என்ன தகவல்கள் பெறப்பட்டன என்பது தெரியவில்லை.
மதுரை ஆதீனம் முன்பெல்லாம் நிறைய நகைகள் போட மாட்டார். ஆனால் சமீப காலமாக அவர் நிறைய நகைகளை அணிந்தபடி காணப்படுகிறார். மேலும் தங்கத்தின் புழக்கமும் அவரது மடத்தில் தற்போது பெருமளவில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. நித்தியானந்தாவின் வருகையும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்தே வருமான வரித்துறையினர் ரெய்டுக்கு வந்து விட்டனர் என்று கூறப்படுகிறது.
படம்: நக்கீரன்












Click it and Unblock the Notifications