மதுரை ஆதீனத்திற்கு வந்த சோதனை... வரலாற்றிலேயே முதல் முறையாக ஐடி ரெய்டு!!

இதுவரை தமிழகத்தில் உள்ள எந்த ஒரு சைவ மடத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்காக வந்ததே இல்லை. அப்படி ஒரு சம்பவம் எங்குமே நடந்ததாக வரலாறு இல்லை. மேலும் அப்படி ஒரு சோதனை குறித்து யாருமே கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. காரணம், அந்த அளவுக்கு இந்த மடங்கள் அனைத்தும் மிக மிக அமைதியாக, எந்தவித சலசலப்பும் இன்றி செயல்பட்டு வந்ததே.
ஆனால் ஒரே நாளில் அத்தனையையும் போட்டு உடைத்து விட்டார் மதுரை ஆதீனம் தனது ஒரே ஒரு முடிவால். மதுரை ஆதீனத்தின் பழமை, அதன் பாரம்பரியம், அதற்கு இருந்த நல்ல பெயர் என அத்தனையையும் போட்டு உடைத்து விட்டார் தற்போதைய ஆதீனம் என்று மதுரை மக்கள் புலம்புகிறார்கள்.
இதுவரை வராத வருமான வரி சோதனையையும் அவர் கூடவே கூட்டிக் கொண்டு வந்து விட்டார் என்றும் ஆதீனத்தை குற்றம் சாட்டுகிறார்கள் சைவ அமைப்பினரும்.
இதுவரை நடந்திராந்த இப்படி ஒரு செயல் நடக்க மதுரை ஆதீனத்தின் சமீ்ப கால செயல்பாடுகளே காரணம் என்பது இவர்களின் குற்றச்சாட்டு. இதுவரை இல்லாத அளவுக்கு தங்கமும், பணமும் பெருமளவில் இங்கு புழங்க ஆரம்பித்துள்ளது. இதற்கான காரணம் அனைவருக்குமே தெரிந்ததுதான். இந்த நிலைக்கு ஆதீனத்தை தள்ளி விட்டு திருஞான சம்பந்தரின் பெயரையும் சேர்த்துக் கெடுத்து விட்டார் மதுரை ஆதீனம் என்கிறார்கள் சைவ அமைப்பினர்.
இதுவரை இல்லாத அளவுக்கு இங்கு பெண்களின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. தனி நபரைப் புகழ்ந்து பாடி கோஷம் போட்டு ஆடுகிறார்கள். இதெல்லாம் ஆதீனத்தின் பாரம்பரியத்திற்கு நல்லதல்ல என்று சைவ அமைப்பினர் எச்சரிக்கிறார்கள்.
தமிழகத்தில் உள்ள சைவ மடங்களிலேயே மூத்ததும்,பழமையானதுமான மதுரை ஆதீனத்திற்கு வந்த இந்த சோதனை, மதுரைக்கே வந்த சோதனையாகத் தெரிவதாக சைவ அமைப்பினர் வருத்தப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications