பாசி மோசடி: ஐஜி பிரமோத்குமாருக்கு நெருக்கமான பெண் டிஐஜி சிக்குகிறார்
கோயம்புத்தூர்: திருச்சி பாசி நிறுவன மோசடிகளை மறைக்க பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கி சிக்கியுள்ள ஐ.ஜி. பிரமோத்குமாருக்கு உடந்தையாக இருந்ததாக பெண் டி.ஐ.ஜி ஒருவரும் சிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருப்பூர் பாசி நிறுவனம் பொதுமக்களிடம் கூடுதல் வட்டித் தருவதாகக் கூறி ரூ.1500 கோடி அளவுக்கு மோசடி செய்தது. இந்த மோசடி குறித்து விசாரிக்காமல் இருக்க பாசி நிறுவனத்தினரிடமிருந்து பல கோடி ரூபாய் லஞ்சம் பணமாக அப்போது ஐ.ஜி.யாக இருந்த பிரமோத்குமார் பெற்றிருப்பதும் தெரியவந்தது..
இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அதிகாரிகள், டெல்லியில் தலைமறைவாக இருந்த பிரமோத்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தொடக்கத்தில் எதனையும் தெரிவிக்க மறுத்துவந்தார் பிரமோத்குமார். பின்னர் அவருக்கு பணம் வாங்கிக் கொடுத்த இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், சண்முகையா ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடத்தியபோது அனைத்தையும் பிரமோத்குமார் ஒப்புக் கொண்டார்.
தற்போது பிரமோத்குமாருக்கு உடந்தையாக இருந்ததாக ஒரு பெண் டி.ஐ.ஜியின் பெயரும் அடிபடத் தொடங்கியிருக்கிறது. எங்கு சென்றாலும் அந்த பெண் டிஐஜி இல்லாமல் பிரமோத்குமார் செல்லமாட்டார் என்கிற அளவுக்கு நெருக்கமாம்.
பாசி நிறுவன பங்குதாரர்களிடம் பணம் பறித்த விவகாரத்தில் ஐ.ஜி. பிரமோத்குமாருக்கு எந்த வகையில் அந்த பெண் டி.ஐ.ஜி. உதவியாக இருந்தார் என்பது பற்றியும் விசாரணை நடத்த சி.பி.ஐ.அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும் பாசி நிதி நிறுவனத்திடம் பேரம் பேசிய அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள், ரவுடிகள் ஆகியோரும் அடுத்தடுத்து சிக்குவார்கள் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications