தூங்க முடியாமல் தவிக்கிறேன்... பாதுகாவலர்கள் கொல்லப்பட்டது குறித்து அலெக்ஸ் பால் மேனன்
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக்கில் எழுதியிருப்பதாவது...
நான் பத்திரமாக திரும்பி வந்து விட்டேன். மீண்டெழ முயற்சித்து வருகிறேன். இருந்தாலும் இன்னும் நான் நொறுங்கிப் போயிருக்கிறேன், மனதெல்லாம் சரியில்லை. அம்ஜத் மற்றும் கிஷன் மீது நான் மிகவும் அன்பு வைத்திருந்தேன். என் மீது அவர்களும் அதிக பாசத்துடன் இருந்தனர். அவர்களை நினைக்கும்போதெல்லாம் என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. தூங்க முடியாமல் தவிக்கிறேன்.
எந்தவித மீடியா வெளிச்சமும் இல்லாமல் அவர்களது வீட்டுக்குப் போக விரும்புகிறேன், அவர்களது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற விரும்புகிறேன். என்னால் எந்த வகையில் உதவ முடியுமோ அந்த வழிகளில் அவர்களுக்கு உதவ விரும்புகிறேன்.
இப்படி கொடூரமான முறையில் எனது கடத்தல் நடைபெறும் என்பதை நான் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை. என் மீது அத்தனை நம்பிக்கையுடன் அந்த அரசு நிகழ்ச்சிக்கு வந்திருந்த மஞ்சிபரா கிராம பழங்குடியின மக்களின் மனதில் பெரும் பயங்கரவாத அச்சுறுத்தலை இந்த சம்பவம் ஏற்படுத்தி வைத்து விட்டது.
என்னுடன் துணையாக நின்ற அத்தனை பேருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். இந்த சோதனையான நேரத்தில் உறுதுணையாக நின்றவர்களை நன்றியுடன் நினைவு கூறுகிறேன். உங்களின் அன்பு என்னை நெகிழ வைத்து விட்டது.
பலர் எனக்கு தொலைபேசி செய்தனர், எஸ்.எம்.எஸ். அனுப்பினர். ஆனால் என்னால் எடுக்க முடியவில்லை. குடும்பத்தினருடன் அமைதியான முறையில் நேரத்தை செலவிட விரும்பினேன். அதனால்தான் எடுக்கவில்லை. அதற்காக மன்னித்து விடுங்கள்.
தொடர்ந்து சுக்மா மாவட்ட மக்களுக்காக உழைக்கப் போகிறேன். எனது வேகத்திலும், செயல்பாட்டிலும் எந்தக் குறைவும் இருக்காது. அனைவருக்கும் மீண்டும் நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் மேனன்.
மாவோயிஸ்டுகள் பிடியிலிருந்து மீண்டு வந்த மேனன், சுக்மா மாவட்ட ஆட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டதாக முதலில் தகவல்கள் வந்தன. இருப்பினும் அதை சட்டிஸ்கர் மாநில முதல்வர் ரமன் சிங் மறுத்து விட்டார். தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவராக மேனன் நீடிப்பார் என்று அவர் கூறியிருந்தார். அதன்படியே நேற்று முதல் மீண்டும் கலெக்டராக செயல்படத் தொடங்கியுள்ளார் மேனன்.