துபாயில் இன்ஸ்டியூட் ஆஃப் சார்டர்ட் அக்கவுண்டண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் 30வது ஆண்டு விழா

இன்ஸ்டியூட் ஆஃப் சார்டர்ட் அக்கவுண்டண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் துபாய் கிளை தலைவர் எஸ். வெங்கடேஷ் தனது துவக்கவுரையில் 30வது ஆண்டு விழா சீரோடும் சிறப்போடும் நடைபெற தங்களது உழைப்பினை நல்கிய அனைவருக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். சிபிடி படிப்புக்கு துபாய் மற்றும் வடக்கு அமீரகத்திலிருந்து 50க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.
30 வது ஆண்டு விழாவினை அமீரகத்துக்கான இந்திய தூதர் எம்.கே. லோகேஷ் துவக்கி வைத்தார். அவர் தனது உரையில் சார்டர்ட் அக்கவுண்டண்ட்கள் அமைதியான பணியாளர்கள் என்றார். இந்திய சார்டர்ட் அக்கவுண்டண்ட்கள் உலகளாவிய அளவில் சிறப்பான பணியாளர்கள் எனப் பெயர் பெற்றவர்கள்.
அமீரக உயர்கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சித்துறை அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 30வது ஆண்டு சிறப்பு மலரை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில் சார்டர்ட் அக்கவுண்டண்டுகளின் பணியினைப் பாராட்டியதுடன், அவர்கள் நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பில் உறுதுணையாக இருந்து வருவதாகக் குறிப்பிட்டார். மேலும் அவர்கள் பொருளாதாரத்தின் தூண்கள் என்றார்.
இந்திய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஹரிஷ் ஷால்வே ஜனநாயகமும், முன்னேற்றமும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். ஜனநாயகம் மூலம் இந்தியா அடைந்துள்ளவளர்ச்சியினை விவரித்தார்.
இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா, பாரதிய ஜனதா ராஜ்யசபா உறுப்பினர் பியூஷ் கோயல், இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்டர்ட் அக்கவுண்டண்ட் ஆஃப் இந்தியா தலைவர் ஜெயதீப் நரேந்திர சர்மா, அமெரிக்காவின் சான்டா கிளாரா பல்கலைக்கழகத்தின் டாக்டர் சஞ்சீவ் ஆர். தாஸ், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் வரலாற்றாய்வாளர் முனைவர் ஃபைஸல் தேவ்ஜி, மஸ்ரிக் கேப்பிடல் அப்துல் காதிர் ஹுசைன், மும்பை விஸ்லிங் உட்ஸ் சர்வதேச ஊடகப் பள்ளியின் பேராசிரியர் உஜ்ஜால் கே. சௌத்ரி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்.












Click it and Unblock the Notifications