கிரிக்கெட், அரசியலைத் தொடர்ந்து பாலிவுட்டுக்குப் பாய்கிறார் சச்சின்!

22 வருடங்களாக விடாப்பிடியாக கிரிக்கெட் விளையாடி வரும் சச்சின் சமீபத்தில்தான் அரசியலுக்குள்ளும் தனது வலது மற்றும் இடது காலை எடுத்து வைத்தார். ராஜ்யசபா எம்.பியாக நியமிக்கப்பட்டுள்ள சச்சின் அடுத்து சினிமாவுக்கும் வரப் போகிறார்.
விதுவினோத் சோப்ரா இயக்கும் புதிய படம் பெராரி கி சவாரி. இப்படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில், சிறப்புத் தோற்றத்தில் சச்சின் வருகிறாராம். இந்தக் காட்சியில் தோன்றுவதற்கு சம்மதம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தனது பெயரையும் பட விளம்பரங்களில் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்துள்ளாராம் சச்சின்.
ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறாராம் சச்சின். சச்சின் செய்யப் போகும் கேரக்டர் என்ன என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சோப்ராவிடம் கேட்டால், சச்சினும் இப்படத்தில் பங்கேற்பது சந்தோஷமாக இருக்கிறது. தனது பெயரையும் பயன்படுத்திக் கொள்ள அவர் அனுமதித்துள்ளார். அவரது ரோல் என்ன என்பது படத்தைப் பார்த்தால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். இப்போது சொல்ல முடியாது என்றார்.
ஷர்மான் ஜோஷி நடித்துள்ள இப்படம் ஜூன் 15ம்தேதி திரைக்கு வருகிறதாம். ஒரு குழந்தையின் கிரிக்கெட் கனவை சித்தரிக்கும் படமாம் இது. அதேசமயம் ஒரு சுவாரஸ்யமான திருப்பத்தையும் படத்தில் வைத்திருக்கிறாராம் சோப்ரா.












Click it and Unblock the Notifications