கேரளாவில் 10ம் வகுப்பு மாணவனை கழுத்தை அறுத்துக் கொன்ற சக மாணவன்
திருவனந்தபுரம்: கேரளாவில் 10ம் வகுப்பு மாணவனை முன்விரோதம் காரணமாக கழுத்தை அறுத்துக் கொன்ற சக மாணவனை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சாத்தங்கரி பகுதியைச் சேர்ந்தவர் வர்கீஸ் மேத்யூ. அவருடைய மகன் லெனின் வர்கீஸ். அவர் திருவல்லா முட்டா புனித ஜார்ஜ் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கோடை விடுமுறைக்கு பிறகு 10ம் வகுப்புக்கு மட்டும் கடந்த இரு தினங்களுக்கு முன் பள்ளி திறந்தது. அதே பகுதியைச் சேர்ந்த அஜி என்பவரின் மகன் அருணும் லெனினுடன் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த ஆண்டு 9ம் வகுப்பில் அருணும், லெனினும் ஒன்றாக படித்தனர். அப்போது வகுப்பு லீடராக அருண் இருந்தார். வகுப்பில் குறும்பு செய்பவர்களின் பெயர்களை எழுதிக் கொடுக்கும்படி ஆசிரியை சொன்னதால் லெனின் பெயரையும் அருண் எழுதிக் கொடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த லெனின் அருணை அடித்தார். தன்னை அடித்தவனை கொல்ல அருண் திட்டமிட்டார். பத்தாம் வகுப்பு தொடங்கிய முதல் நாளான்று காலை லெனின் பள்ளிக்கு சென்றார். அருணும் பள்ளிக்கு வந்தார். முதல் நாள் என்பதால் காலை 11.30 மணிக்கே வகுப்பு முடிந்தது. ஆனால் இரவாகியும் லெனின் வீடு திரும்பவில்லை.
இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து லெனினை தேடினர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பள்ளியின் பின்புறம் லெனின் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அவரைக் கொன்றது அருண் என்பது தெரிய வந்தது. இதற்கிடையே அருண் தலைமறைவாகிவிட்டார். காசரக்கோட்டுக்கு தப்ப முயன்ற அவரை சங்கனச்சேரி ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். மேலும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியையும் கைப்பற்றினர்.
இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications