கடவுளே, அவர்கள் இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள், மன்னியும்!... ப.சிதம்பரம்

ஏர்செல்-மாக்ஸிஸ் விவகாரத்தில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் பெரும் பணம் பார்த்தார் என்பது ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமியின் குற்றச்சாட்டாகும். இதை தற்போது பாஜக பிடித்துக் கொண்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இதைப் பிரச்சினையாக்கி வருகிறது. இன்றும் வழக்கம் போல இந்த விவகாரத்தை எழுப்பியது பாஜக.
இன்று காலை லோக்சபா கூடியதும் பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா எழுந்து, இந்த விவகாரத்தில் அரசின் நிலை என்ன என்பதை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி விளக்க வேண்டும் என்றார். அப்போது பாஜக உறுப்பினர்கள் எழுந்து நின்று அவமானம், அவமானம் என்று கூச்சலிட்டனர். அதற்கு நடுவில் பேசிய யஷ்வந்த் சின்ஹா, மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது அப்பட்டமாக தெரிகிறது. இதை மறைக்க அரசு முயலக் கூடாது என்றார்.
மேலும் இதுதொடர்பாக அவை முன்னவரான பிரணாப் முகர்ஜி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார். அதற்கு கோபத்துடன் பிரணாப் முகர்ஜி பதிலளிக்கவே அவையில் கூச்சல் கூடியது. இதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் பிற்பகலில் அவை மீண்டும் கூடியபோது ப.சிதம்பரம் எழுந்து விளக்கம் அளிக்க முயற்சித்தார். அவர் ஒரு அறிக்கையை வாசித்தார். அதில், ஏர்செல் விவகாரத்தில் தனது மகனுக்கோ, தனது குடும்பத்தினருக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என்றார். அதை ஏற்க மறுத்த பாஜக உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷமிட்டபடி இருந்தனர்.
இதையடுத்து விரக்தியுடன் ப.சிதம்பரம், கடவுளே, அவர்கள் இன்னதெறு தெரியாமல் செய்கிறார்கள், அவர்களை மன்னியும் என்ற பைபிள் வாசகத்தைக் கூறி விட்டு சிரித்தபடி அமர்ந்தார்.
என்ன பிரச்சினை...?
2006ம் ஆண்டு ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தார். அப்போது மாக்சிஸ் நிறுவனத்திடம் ஏர்செல்லை விற்பது தொடர்பான அனுமதி கோப்பில் கையெழுத்திடாமல் பல மாதங்கள் கிடப்பில் போட்டிருந்ததாக சாமி கூறுகிறார். மேலும் ஏர்செல் நிறுவனத்தின் பங்குகள் சிலவற்றை ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி வாங்கினார். அதன் பிறகே விற்பனை தொடர்பான அனுமதியை வழங்கினார் ப.சிதம்பரம் என்பது சாமியின் இன்னொரு குற்றச்சாட்டு. இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் பெரும் பணம் பார்க்க அனுமதித்தார் ப.சிதம்பரம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார் சாமி.
இதை ஏற்கனவே மத்திய அரசு மறுத்துள்ளது. ப.சிதம்பரமும் இதை மறுத்துள்ளார். இருப்பினும் பாஜக தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications