எப்போதும் ரஞ்சிதாவுடன் உள்ள நித்தியானந்தாவை ஆதீனமாக ஏற்க முடியாது- ஜெயேந்திரர்

கிருஷ்ணகிரி வந்த ஜெயேந்திரர் அங்குள்ள சங்கர மடத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தேன். குறிப்பாக காசி, நேபாளம், பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் இருந்த விராத் நகர், பீகார் பூரி மடம் ஆகிய இடங்களுக்கு சென்று உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும் நடந்த பல்வேறு சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டேன்.
நாட்டில் ஆன்மிகம் வளர்ச்சியடைந்துள்ளது. கடவுள் இல்லை என்று சொல்கிறவர்கள் குடும்பங்களில் கூட ஆன்மிகம் வளர்ச்சி அடைந்துள்ளது தெரியவருகிறது.
மதுரை ஆதீனமாக நித்தியானந்தா மகுடம் சூட்டிக் கொண்டதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதை எதிர்ப்பதாக கடந்த 3 நாட்களுக்கு முன்பே சங்கர மடத்தில் இருந்து தெரிவித்தோம்.
இதுபோன்ற செயல்கள் ஆன்மிகத்தை நிச்சயம் பாதிக்கும். மதுரை ஆதீனம் என்பது ஞானசம்பந்தர் பரம்பரையில் வந்தது. ஆதீனமாக பட்டம் சூட்டி கொள்பவர்கள் மொட்டை அடித்து தலையில் ருத்ராட்ச மாலை அணிய வேண்டும் என்ற ஆன்மிக விதிமுறை உள்ளது. இவ்வாறு தலையில் மொட்டை அடித்து தலையில் ருத்ராட்ச மாலை அணிந்திருப்பவர்களை மட்டுமே ஆதீனமாக பட்டம் சூட்ட வேண்டும்.
ஆனால் நித்தியானந்தா இந்த விதிமுறைகளை மீறி தலையில் முடியோடு பட்டம் சூட்டிக் கொண்டுள்ளார். இதனை ஆன்மிகவாதிகள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மொட்டை போட்டால்தான் சாமியாராக லாயக்கு.
அப்புறண், ரஞ்சிதா என்ற பெண் எப்போதும் நித்தியானந்தாவுடன் உள்ளார். அவர் கூடவேதான் இருப்பேன்னு சொல்லி கூடவே இருக்காங்க. இதுவும் ஆன்மிகத்திற்கு எதிரானது. திருஞான சம்பந்தர் வழியில் வந்த பெருமைவாய்ந்த மடத்திற்கு நித்தியானந்தா, ரஞ்சிதாவுடன் வருவது பெருத்த அவமானம். ரூ.1 கோடி லஞ்சமாக கொடுத்தே நித்தியானந்தா முடி சூட்டிக்கொண்டார். எனவே ஆதின மடத்தில் இருந்து நித்தியானந்தாவை உடனே வெளியேற்ற வேண்டும்.
ஆன்மிகவாதிகள் நித்தியானந்தாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதை நான் ஆதரிக்கிறேன்.
தமிழக அரசு ஆன்மிகவாதிகளுக்கு சிறப்பான ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. புதிய ஆண்டான நந்தன வருடத்தில் பொதுமக்கள் சகல வசதிகளையும் பெற்று சந்தோஷமாக, ஆனந்தமாக இருப்பார்கள். நந்தனம் என்ற வடமொழி சொல்லுக்கு தமிழில் ஆனந்தம் என்று பெயர். அதனால் பொதுமக்கள் நந்தன ஆண்டில் அனைத்து வளங்களையும் பெற்று ஆனந்தமாக இருப்பார்கள் என்றார் ஜெயேந்திரர்.
சங்கரராமன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் ஜெயேந்திரர். தற்போது இவர் ஜாமீனில் வெளியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications